Skip to main content

குஜராத்திலிருந்து மாநிலங்களவை பதவிக்கு ஜே.பி. நட்டா போட்டி!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
JP Natta contests for Rajya Sabha post from Gujarat

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சலப் பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதில் குஜராத்திலிருந்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மகாராஷ்டிரா மாநிலங்களவை பதவிக்காகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்