
பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் (நிறுவன) தலைவர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி (28.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ், கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை (ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்) நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ராமதாஸ் அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி குறுக்கிட்டு, ‘முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி, “எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார்” எனப் பேசியிருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என அன்புமணியும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025) வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது கடந்த 16ஆம் தேதி (16.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நேற்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில்,“என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ரொம்ப மன உளைச்சலாக உள்ளது. நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஒரு பலமான கட்சி அது தனித்தன்மையோடு இருக்கிற கட்சி. கொள்கையோடும் லட்சியத்தோடு இருக்கிற கட்சி. சரியான சூழ்நிலை உருவாக வேண்டும். ரொம்ப வேதனைபடுகிறோம். கஷ்டப்படுகிறோம். சொல்லக்கூடாதென்று நினைத்தேன். திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறார்கள். சொல்லியே ஆகணுங்கறதுனால சொல்ல வேண்டியதா இருக்கிறது. இல்லை என்றால் நான் பாட்டுக்கு ஓடிருப்பேன். ஓடினாலும் சொல்லாமல் ஓடுகிறானே அது ஒரு புதிய செய்தியா வேற மாதிரி போடுகிறது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கிறது.
இந்த சூழல் சீராக வேண்டும். மறுபடியும் கட்சி சீராக வேண்டும். வலிமையான கட்சியாக பலமான கட்சியாக மீண்டும் வரனும் ஒரு பெரிய மாநாட்டைச் சந்தித்த கட்சி தேர்தலைச் சந்திக்கப் போகிற நேரத்தில் வலிமையா இருக்க வேண்டும் என்று தீவிரமா முயற்சி செய்கிறோம். ராமதாஸை பார்த்து பேசுறத்துக்கு தான் வந்துள்ளேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது அதிகமாகவும் கேள்வி கேட்டு பதில் சொல்ற நிலையில் இல்லை. என் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிறன சூழலைப் பற்றி வெளியில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் சொல்வதும் சரியாக இருக்காது மனசு கஷ்டமாக இருக்கிறது. எனவே இப்போது எதுவும் சொல்கிறது நல்லதாக இருக்காது” எனத் தெரிவித்தார்.