
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி காமீஸ்வரர் ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக இன்று (05.06.2025) காலை விளக்கம் அளிக்குமாறு அரசு தரப்புக்கும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கின்றார்.
அதில், “சின்னசாமி மைதானத்தை பொறுத்தவரைக்கும் வழக்கமாக கிரிக்கெட் மேட்ச் நடைபெறும் காலங்களில் 800 போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் நேற்று (04.06.2025) இந்த மைதானத்திற்கு 1600 போலீசார் கூடுதலாகப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமாக 34 ஆயிரத்து 600 பேருக்கு மட்டுமே இந்த மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான டிக்கெட் விற்பனை மட்டுமே செய்யப்படும். இருப்பினும் நேற்று இலவச அனுமதி என்பதால் கடைசி நேரத்தில் இரண்டரை லட்சம் பேர் மைதானத்திற்குள் செல்வதற்காக முண்டியடித்துக் கொண்டு வந்திருந்தனர்.
மைதானத்தில் மொத்தம் உள்ள 21 கதவுகளுமே திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதில் 3 கதவுகளில் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கேட் 6இல் 3 பேரும் கேட்7இல் 4 பேரும், 8வது கேட்டில் 4 பேரும் என மொத்தம் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணைக்கும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். அங்கு நடந்த சம்பவங்களை வீடியோ பதிவு மூலமாக தெரிவிக்கும்போது ஒளிவும் மறைவு இன்றி பதிவு செய்யப்படும். இதற்காகத் தனியாக ஒரு கமிட்டியும் அமைத்திருக்கிறோம்.15 நாட்களுக்குள்ளாக இந்த விசாரணையை முடிக்கும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு கொண்ட நீதிபதி பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை அரசு தரப்புக்குஎழுப்பி இருந்தார் அதில், “விதான் சௌதான் (அம்மாநில சட்டப்பேரவை வளாகம்) மற்றும் சின்னசாமி மைதானம் என 2 இடங்களிலும் ஒரே நேரத்தில் 2 நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?. இந்த நிகழ்ச்சியை நடத்தியது யார்?. கிரிக்கெட் வாரியமா? அல்லது அரசு தரப்பிலா?”. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தரப்பிலிருந்து பாதுகாப்பிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், ஐபிஎல் நிர்வாகம் மற்றும் இந்தியன் கிரிக்கெட் அசோசியேஷன் ஆகியோருக்கும் நோட்டீஸ் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு (10.06.2025 - செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.