
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பதாக சில நாளிதழ்களில் இன்று (05.06.2025) வெளியிட்டிருக்கும் செய்திக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 362 பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் தலைமை அலுவலகத்தில் மட்டும் 154 பெண் பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், சக உயர் அதிகாரிகளால் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இப்போக்குவரத்துக் கழகத்தில் சகப் பணியாளர்களாலும், உயர் அதிகாரிகளாலும் தனக்கு தொந்தரவு இருப்பதாக எந்தவொரு பெண் பணியாளரும் இதுவரை இக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணைக் குழுவிற்கு புகார் எதுவும் அளிக்கவில்லை. எனவே, பெண்கள் அளிக்கும் புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது முற்றிலும் தவறான செய்தியாகும். பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெண் பணியாளரின் உயர் அதிகாரியாக தற்போது ஒரு பெண் அதிகாரி தான் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருப்பது தவறான தகவலாகும். மேலும் தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிட மாற்றம் செய்திருப்பதாக தெரிவித்திருப்பது முற்றிலும் தவறானதாகும். அவர் இதுவரை எந்த புகாரையும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் உள்ளக விசாரணைக் குழுவிற்கு அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணி இட மாற்றம் செய்திருப்பதோடு, அவருக்கான வருகைப் பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பதாக தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.
மேற்கண்ட பணியாளர் நீண்ட காலமாக ஒரே பிரிவில் பணியாற்றி வருகிறார். மற்றும் அப்பணியில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் மட்டுமே அவர் அதே அலுவலக வளாகத்தில் வேறு பிரிவிற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவரது பணியில் குறைபாடு காரணமாக பல்வேறு பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடத்தை விதிகளுக்கு புறம்பாக புதிய பணியிடத்தில் சேர மறுத்து பணிக்கு ஆஜராகததால் அவருக்கு வருகைப்பதிவு வழங்கப்படவில்லை. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் முற்றிலும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.