
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று (04.06.2025) காலை முதலே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள், பெண்கள், சிறுமி என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். 35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், காவல்துறையை அறிவுறுத்தலை மீறி இந்த பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை, பொறுப்பு தலைமை நீதிபதிகள் வி. காமேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆர்சிபி பாராட்டு விழாவின் போது வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகன் ஜைத் கான், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் பின்னால் நின்றுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசு விழாவில் அமைச்சரின் மகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடகா பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. விதான சவுதா வளாகத்திற்குள் மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத போது போது அமைச்சர்களின் மகன்கள் மட்டும் மேடைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.அரசு விழாவில் அமைச்சர்களின் மகன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத் கூறியதாவது, “அமைச்சர்களின் மகன்கள் மேடைக்குள் எப்படி நுழைந்தார்கள். சாதாரண குடிமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேடையில் இருப்பது என்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும்” என்று கூறினார்.