
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளார், வணிக வரித்துறை துணை ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் துணை ஆனையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 70 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிக்கையில் வெளியாகியிருந்தது. இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை படி நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1 பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ (தொகுதி- 1 ஏ பணி) - இல் அடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.