Skip to main content

“மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - துணை முதல்வர் டி.கே. சிவகுமார்!

Published on 04/06/2025 | Edited on 04/06/2025

 

Dy CM DK Sivakumar says I apologize

இந்த ஆண்டுக்கான 18வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (03.06.2025) இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. கடந்த 17 சீசனில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி. அணி முதல் முறையாக இந்தாண்டு கோப்பையை வென்றது. இதனால், ஆர்.சி.பி. ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

18 ஆண்டுக் கால கனவை நனவாக்கிய ஆர்.சி.பி. அணியை வரவேற்கப் பெங்களூருவில் இன்று (04.06.2025) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆர்.சி.பி. அணி வீரர்கள் வெற்றி பேரணி நடைபெற இருந்தது. அதன்படி, அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று ஆர்சிபி வீரர்கள் பெங்களூரு வந்தனர். இதற்கிடையில், ஆர்சிபி வெற்றி பேரணியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று காலை முதலே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள் பெண்கள் என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த ரசிகர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அணியை வரவேற்க ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொண்டாட்டத்தின் போது உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் அனைத்து முடிவுக்கு வந்தது. அதோடு கிரிக்கெட வீரர்களைக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கௌரவித்து விட்டு அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாகத் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவிக்கையில், “பெங்களூரு அணியின் சார்பாக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் . 18 வருட நீண்ட போராட்டம் ஆகும். விராட் கோலிக்கு உரிய மரியாதை தரப்பட்டது. கட்டுப்படுத்த முடியாத வகையில் கூட்டம் இருந்தது. கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உண்மையில் நான் அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Dy CM DK Sivakumar says I apologize

மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.சி.பி.யின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டம் இருக்கட்டும். ஆனால் அது உயிரை விடப் பெரியதாக இருக்கக்கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்