Skip to main content

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம்; கதறி அழுத டி.கே.சிவக்குமார்

Published on 05/06/2025 | Edited on 05/06/2025

 

 D.K. Sivakumar cries Tragic incident during RCB celebration

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று (04.06.2025) காலை முதலே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள், பெண்கள், சிறுமி என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். 35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், காவல்துறையை அறிவுறுத்தலை மீறி இந்த பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை, பொறுப்பு தலைமை நீதிபதிகள் வி. காமேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

 D.K. Sivakumar cries Tragic incident during RCB celebration

இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி பேரணியின் போது ஏற்பட்ட கோர சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கதறி கதறி அழுதுள்ளார். இன்று (05-06-25) டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “குழந்தைகளைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், அந்த சிறு குழந்தைகள், அவர்களுக்கு 15 வயது என்று நான் பார்த்தேன். என் கண்களால் குறைந்தது 10 பேர் இறந்து போனதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இழப்பை எந்த குடும்பமும் ஜீரணிக்க முடியாது” என்று கூறிக்கொண்டே கேமரா முன்பே கதறி அழுதார். அதன் பின்னர் பேசிய அவர், “சம்பவம் நடந்த போது, காவல்துறை ஆணையர் நிகழ்வை 10 நிமிடங்களில் முடிக்கச் சொன்னார். நான் நிகழ்வை விரைவுபடுத்தினேன். 1-2 உயிர்கள் பலியாகியுள்ளன, நிகழ்வை விரைவுபடுத்துங்கள், நிகழ்வை 10 நிமிடங்களில் முடிக்கவும் என்று அவர் என்னிடம் கூறினார். 

நானும், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகமும் அங்கு செல்ல முடியவில்லை, நான் அவர்களை என் காரில் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கேஎஸ்சிஏ(KSCA) க்குச் செல்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. தலைவர், செயலாளரை என் காரில் அழைத்துச் சென்றேன். அவர்கள் எந்த அறிவிப்புகளையும் வெளியிட நாங்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் விரைவாக முடித்துவிட்டோம், கேஎஸ்சிஏவும் ஒப்புக்கொண்டது. நாம் நிர்வாக ரீதியாக ஒரு பாடம் கற்றுக்கொள்ளா வேண்டும். இறந்த உடல்களை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யட்டும். எத்தனை இறந்த உடல்களை வைத்து அவர்கள் அரசியல் செய்தார்கள் என்பதை நான் பட்டியலிடுவேன். ஆனால், சிறு குழந்தைகளைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. அவர்களின் வலிகளை நான் பார்க்கிறேன்” என்று வேதனையோடு தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்