Skip to main content

62 மரங்களை வெட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: சிறை தண்டனை இல்லை... ஆனால் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

CALCUTTA HIGH COURT

 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியான ரசல் தெருவில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, செவன் ஸ்டார் ஹோட்டல் கட்டுவதற்காக 62 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்தது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மரங்களை வெட்டிய அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

 

அந்த மனுவில், தாங்கள் முதல்முறையாக இந்த தவறை செய்துள்ளதாக குறிப்பிட்டதோடு, 62 மரங்களை வெட்டியதற்கு இழப்பீடாக அதைவிட இரட்டிப்பான மரங்களை நடுவதாகவும், எனவே தங்களுக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டுமென்றும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் மந்தா, மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கைக் கைவிட ரியல் எஸ்டேட் நிறுவனம் 15 நாட்களுக்குள் 40 கோடி அபராதம் செலுத்த வேண்டுமெனவும் 100 மரங்களை நட வேண்டுமென்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

 

"மனுதாரர்களுக்கு (மரத்தை வெட்டியவர்களை) சிறை தண்டனை விதிப்பது, வெட்டப்பட்ட மரங்களைத் திரும்ப கொண்டுவராது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மாநிலம் அல்லது வனத்துறை அல்லது சமூகத்திற்கு இழப்பீடு வழங்குவதே நியாயமான தண்டனையாக இருக்கும். இந்த இழப்பீட்டை பொதுவாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதற்கு எதிரான கண்காணிப்பை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தலாம்" என நீதிபதி ராஜசேகர் மந்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்குள் 40 கோடியை செலுத்துவதோடு 100 மரங்களை நடாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டினால், அம்மாநில சட்டப்படி நீதிமன்றம் 5,000 அபராதமோ, ஓராண்டு சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெட்டப்பட்ட அளவிற்கான மரங்களை அதை வெட்டியவர் திரும்ப நட வேண்டும். அதுவரை தினமும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.