Skip to main content

உ.பியில் தொடரும் அவலம்; இரண்டு சிறுமிகள் மர்ம மரணம்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

unnao incident

 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பட்டியலின சிறுமிகள் மூவர், கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள வயல்வெளியில் மூவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்தபோது, இருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மூன்று சிறுமிகளின் கைகளும் கட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அம்மாநில காவல்துறை இதனை மறுத்துள்ளது. மேலும் சிறுமிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர், "முதல்கட்ட தகவலின்படி, சிறுமிகள் புல் வெட்ட சென்றிருந்தனர். விஷத்தின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, கண்ணால் பார்த்தவர்கள் மற்றும் மருத்துவரின் கருத்துப்படி, அந்த இடத்தில் நிறைய நுரை காணப்பட்டது. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட தகவலின்படி உடல்களில் எந்தக் காயமும் இல்லை. விசாரணைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் உள்ள சிறுமிக்கும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.