Skip to main content

கடத்தப்பட்ட காதல் மனைவி! கணவருக்கே அனுப்பப்பட்ட வீடியோவால் பரபரப்பு!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Thenkasi patel woman took gujarat

 

தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டா குளம் ஏரியாவைச் சேர்ந்த மாரியப்பன் சவுதியில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தவர். இவரது இளைய மகன் வினித். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குஜராத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த நவீன் பட்டேல் - தர்மிஸ்தா பட்டேல் தம்பதி இதே பகுதியில் மர அறுவை மில் நடத்திவருகிறார்கள். அவர்களின் மூத்த மகள்தான் கிருத்திகா. பள்ளிப் படிப்பை முடித்த வினித், மேற்படிப்பிற்குப்பின், சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணியிலிருந்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்த கிருத்திகா டிப்ளமோ படிப்பிற்காக சென்னை வந்தபோது வினித்- கிருத்திகாவின் காதல் வளர்ந்திருக்கிறது.

 

இந்தச் சூழலில்தான், தன் மகள் கிருத்திகாவின் காதல் விஷயம் நவீனுக்கு தெரியவர, நேராக வினித்தின் தந்தை மாரியப்பனிடம் சென்று,  “நாங்க குஜராத் பட்டேல் சாதி. ரெண்டு தரப்புக்கும் சரிப்படாது” என்று உறுமிவிட்டு வந்திருக்கிறார்.

 

சம்பவத்திற்குப் பின்பு கடந்த அக்டோபரில் கிருத்திகாவின் வீட்டிற்குச் சென்ற வினித், அவரது பெற்றோரிடம் தங்களின் 6 வருடக் காதலைக் கூறி, பெண் கேட்டிருக்கிறார். வினித்தை ஏளனமாகப் பேசி தாக்கப் பாய்ந்திருக்கிறார் நவீன். வினித் ஒருவழியாகத் தப்பித்து வீடு வந்திருக்கிறார். மறுநாள் வீட்டில் தன் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வெளியேறி அருகிலுள்ள வினித்தின் வீட்டிற்கு வந்திருக்கிறார் கிருத்திகா. இருவரும் நவ-27 அன்று நாகர்கோவிலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். முறைப்படி திருமணத்தை அங்குள்ள நோட்ரிக் பப்ளிக்கிடம் பதிவும் செய்திருக்கிறார்கள்.

 

Thenkasi patel woman took gujarat

 

அதையடுத்து மும்பை சென்ற வினித்தும் கிருத்திகாவும், அங்கிருந்து புனே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கிறார்கள். இதற்கிடையே நவீனும் அவரது உறவினர்களும் இவர்களைத் தேடி வலைவீசியும் சிக்கவில்லை.

 

ஜன-20 அன்று வினித்தின் பெற்றோர், உறவினர் முன்னிலையில் வினித்திற்கும், கிருத்திகா விற்கும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இதற்கிடையே கிருத்திகாவின் உடல்நலம் காரணமாக கிளினிக்கிற்கு தனது காரில் அவளை வினித் கூட்டிப் போயிருக்கிறார். இதனையறிந்த கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலும் அவரது உறவினர்களும் கிளினிக்கிலிருந்து வெளியே வந்த கிருத்திகாவை தூக்கிச்செல்கிற வகையில் காரை மறித்து வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் பதட்டமான காதல் தம்பதியர் வேறுவழியில் தப்பி, ஆட்டோ ஒன்றில் தன் வீட்டிற்குப் போகாமல், குத்துக்கல் வலசையிலிருக்கும் தன் உறவினர் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். மனைவி கிருத்திகாவுடன் அங்கேயே தங்கிய வினித், தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு ஆன்லைன் மூலமாக குற்றாலம் காவல் நிலையத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.

 

இந்தப் புகாரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கன்னா, வினித், கிருத்திகாவை அழைத்தபோது, உடன் வினித்தின் உறவினரும் போயிருக்கிறார்கள். தன் மனைவி கிருத்திகாவின் கையைப் பிடித்தபடி உள்ளே வந்த வினித்தைப் பார்த்து சூடான இன்ஸ்பெக்டர், “அவ கையை விட்டுட்டு வாய்யா” என்றிருக்கிறார். இன்ஸ்பெக் டர் ராஜேஷ்கன்னாவிடம், வினித்தை விரும்பி திருமணம் செய்துகொண்டதையும் அவருடன் தான் செல்வேன் என்றும் சொல்லியிருக்கிறார் கிருத்திகா. ஆனாலும் கிருத்திகாவை அவளின் பெற்றோருடன் அனுப்பிவைக்கிற முயற்சியிலிருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். அது முடியாமல் போயிருக்கிறது.

 

Thenkasi patel woman took gujarat

 

பின்னர் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் போன தம்பதியரின் புகார் மனு ஜன-25 அன்று விசாரணைக்கு வரவே, அதுசமயம் பொறுப்பிலிருந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், வினித் தம்பதியரை வரவழைத்தவர், தனக்கு நெருக்கடி எனக்கூறி புகாரை வாபஸ் வாங்கும்படி வினித்திடம் கெடுபிடி காட்ட, வினித் மறுத்திருக்கிறார். அதேநேரம், விசாரணைக்கு வராத கிருத்திகாவின் பெற்றோர் இரவு 7 மணிக்கு வருவதாகச் சொல்ல, காதல் தம்பதியர் வீடு திரும்பியிருக்கிறார்கள். வாய்ப்பிற்காகக் காத்திருந்த நவீன் பட்டேல், தன் உறவினர்கள் மற்றும் ரவுடிகளுடன், காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய காதல் தம்பதியரின் காரை நான்கு கார்களில் விரட்டியிருக்கிறார். இதனால் பீதியாகிப்போன வினித் தன் உறவினரின் குத்துக்கல்வலசை வீட்டிற்கு விரைந்திருக்கிறார்.

 

சாதி வெறி, ஆணவத்தின் உச்சியிலிருந்த நவீன் பட்டேலும் அவரது குழுவினரும் வீடுபுகுந்து அடித்து துவம்சம் செய்து, எதிர்த்த வினித்தையும் உறவினர்களையும் தாக்கி, கிருத்திகாவைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். தன் மனைவி கடத்தப்பட்டதை தன் பெற்றோர்களுடன் புகார் செய்ய குற்றாலம் காவல் நிலையம் சென்ற வினித், ஒருநாள் முழுக்கப் பழியாய்க் காத்திருந்திருக்கிறார். இருந்தும் காவல் அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லையாம். மறுநாள் இரவு வந்த டி.எஸ்.பி. மணிமாறனும், இந்தப் புகாரின் மீது எப்.ஐ.ஆர். போடமுடியாது என்று சொல்லிவிட்டுப் போயுள்ளார்.

 

இந்நிலையில் பட்டேல் குரூப் கிருத்திகாவைக் கடத்திய வீடியோ வைரலாகவே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரை போய், சம்பவம் சீரியசாகியிருக்கிறது. தென்காசி மாவட்டக் காவல்துறையின் மீதான தனது கடும் அதிருப்தியை டி.ஜி.பி. வெளிப்படுத்திய பிறகே நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. எல்லாம் நடந்து முடிந்தபிறகே கிருத்திகாவின் தந்தை நவீன், தாய் தர்மிஸ்தா, டிரைவர் ராசு, உறவினர்களான விஷால், கிருத்தி, ராஜேஸ், மைத்ரிக் உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. 

 

Thenkasi patel woman took gujarat

 

வினித் மற்றும் அவரது குடும்பத்தாரை நாம் சந்தித்தபோது, “6 வருடமாக உயிராய்க் காதலித்தோம். திருமணம் செய்து இரண்டு மாதத்திற்கும் மேல் இணைந்து வாழ்ந்தோம். அவர்கள் உயர் சாதியாம். அந்த ஆணவ வெறியில் என் மனைவியை வலுக்கட்டாயமாக கட்ச் பகுதிக்கே கடத்திச்சென்றதாகத் தெரிகிறது. இப்ப வந்த வீடியோவுலகூட, மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகி, அவருடன் இருக்கிறேன். எனக்கு யாரும் அழுத்தம் தரலை, டார்ச்சர் செய்யவில்லை என்று பேசும் காட்சியும் படமும் வந்திருக்கு. அது கிருத்திகா இயல்பா பேசுன மாதிரியில்ல. இங்கேயோ, போலீசின் ஆரம்ப விசாரணையிலோ, கிருத்திகாவோ, அவரது பெற்றோரோ ஏற்கனவே இந்த திருமணம் பற்றி எந்த இடத்திலும் சொல்லாமல் இப்போது தெரிவிப்பது ஆச்சர்யமாயிருக்கு. அவ உயிருக்கு ஏதேனும் ஆயிருமோன்னுதான் பயமாயிருக்கு” என்றார்.

 

இதுகுறித்து நாம் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சாம்சனிடம் பேசியபோது, “நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படைகள் குஜராத் சென்றிருக்கிறது” என்றார்.

 

Thenkasi patel woman took gujarat

 

இதனிடையே பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட வினித், தன் மனைவி கிருத்திகாவை மீட்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை போலீசார் தரப்பில் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

 

நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் தங்களது உறவினர் மூலம் கிருத்திகாவை மதுரை உயர்நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் ஆஜர்படுத்தினர். அதேசமயம் அவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வினீத்துக்கும் -கிருத்திகாவுக்கும் திருமணம் ஆனதற்கான ஆவணங்களை நீதிபதிகள் கோரினர். அதனைச் சரிபார்த்தபின், குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்த மைத்ரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பினர். அவர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதமே கிருத்திகா - மைத்ரிக் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறப்பட்டதற்கான ஆதாரங்களைக் கோரினர். அப்படி எதனையும் அவர்களால் சமர்ப்பிக்கமுடியவில்லை.

 

Thenkasi patel woman took gujarat

 

குஜராத்துக்கு கடத்தப்பட்ட கிருத்திகாவிடமும் நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். பெற்றோருடன் விரும்பியே சென்றதாக கிருத்திகா தெரிவித்த நிலையில், அக்டோபரில் மைத்ரிக்குடன் திருமணம் செய்த நிலையில், இங்கே ஏன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என்ற நீதிபதியின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார் கிருத்திகா.

 

பின் நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெறவேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இரு தரப்பும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் வினித்-கிருத்திகா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

 

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Next Story

ஊருக்குள் சிக்கிய அதிமுகவினர்; வேட்பாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
woman demanded justice after rejecting AIADMK candidate from Tenkasi constituency

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலுவாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார்.

அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றனர். பின்னர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அதனுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு பெரிய கட்சிகளுமே பாஜக வை வீழ்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தொகுதியில் உள்ள பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி,  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், வாணியம்பாடியில் உள்ள பெருமாள்பேட்டை, கதர்பேட்டை, கச்சேரி சாலை, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், அங்குள்ள தர்பூசணி கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் உதயேந்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். மதிய நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாணியம்பாடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், எம்.எல்.ஏ செந்தில்குமாரை நிறுத்தியுள்ளார்.

அங்கு நின்ற அவரிடம் ஆவேசமாக பேசிய அந்தப் பெண், நான் இங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பணியில் சேர்த்து விட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்களால் எனக்கு வேலை போனது. ஏன் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டீர்கள் எனக் கேட்டால் வாய் பேசுகிறேன் என்கிறார்கள். நான் எதற்காக வாய் பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?... என அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த அதிமுக  எம்.எல்.ஏ இந்த பேரூராட்சியில் திமுககாரர் தானே தலைவராக உள்ளார்... என்று மடக்கியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பேசிய அந்தப் பெண், எனக்கு வேலை போன போது, அதிமுகவினர் தான் இருந்தார்கள். எனக் கூறி கொந்தளித்துள்ளார். அப்போது அங்கு வந்த சில அதிமுக தொண்டர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உடனே பதிலடி கொடுத்த அந்தப் பெண், சார்... எனக்கும் உங்களுக்கும் பேச்சு இல்ல... நான் எம்.எல்.ஏ விடம்தான் பேசுகிறேன்.... உங்களிடம் பேசவில்லை... என எச்சரித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்து நின்ற அதிமுக எம்.எல்.ஏ, ஒருவழியாக அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.