Skip to main content

'கால்களை இழந்தாலும் காதலை இழக்காத காதலர்கள்'-அரசையே திரும்பி பார்க்கவைத்த 'ஒரு உண்மை காதல்'

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

 'Lovers who lose their legs but never lose their love'

 

பிப்ரவரி 14 'காதலர் தினம்'. பலரது காதல் இனக்கவர்ச்சியாகவே மாறிக் கொண்டிருக்கிறது. சிலரது காதல் கைகூடாமல் உயிரைக் கூட மாய்க்கச் செய்துவிடுகிறது. ஆனால் விமலா-ராஜாவின் காதல் ரொம்ப புனிதமாக பார்க்கப்படுகிறது.

 

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்தப்பகுதியிலிருந்து பிழைப்பிற்காக திருப்பூர் சென்றாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்களும் இளம்பெண்களும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்ற காலம் அது. இப்படித் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சம்மட்டிவிடுதி ஊராட்சி, மேலவிடுதி கிராமத்தில் இருந்து பனியன் கம்பெனியில் காஜா கட்டும் வேலைக்காக சென்றார் ராஜா. சில வருட வேலையில் கிடைத்த சேமிப்பை வைத்து சிறிய காஜா மெஷின் வாங்கி முதலாளி ஆனார்.

 

அதே காலக்கட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குடும்ப வறுமையைப் போக்க வேலைக்கு வந்த விமலா, ராஜாவை பார்க்க இருவருக்கும் காதல் மலர்ந்தது. ராஜா சிறிய நிறுவன முதலாளி ஆக தன்னால் ஆன உதவிகளையும் செய்தார் விமலா. சில வருட காதலுக்கு பின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வி எழ, நண்பர்கள் உதவியோடு திருமணமும் செய்து கொண்டனர். தனிக்குடித்தனம் போய் சில மாதங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை தொடர்ந்து.

 

 'Lovers who lose their legs but never lose their love'

 

ஆனால் 6 மாதம் கழித்து திடீரென்று ஒருநாள் காதல் கணவர் ராஜாவுக்கு கால்களில் வலி ஏற்பட, திருப்பூரில் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தனர். சிகிச்சைக்காக கையிலிருந்த பணத்தோடு சின்ன நிறுவனத்தையும் விற்று அந்த பணமும் செலவானது. ஆனால் கால் வலி குணமாகவில்லை. சொந்த ஊருக்கு போய் சிகிச்சை எடுக்கலாம் என்று ராஜா ஊருக்கு வர, விமலாவை அவரது பெற்றோர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். எந்த தொடர்புகளும் இல்லை இருவருக்குள்ளும். இப்படியே பல மாதங்கள் போன நிலையில் விமலாவின் உறவினர்கள் விமலாவுக்கு மறுமணம் செய்ய ஆலோசனை சொன்னார்கள். இந்தநிலையில்தான் ராஜாவின் நண்பர்கள் மூலம் ராஜாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட விமலா ஒரு நாள் கிளம்பி மேலவிடுதி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

 

 'Lovers who lose their legs but never lose their love'

 

ராஜா வீட்டிற்கு வந்து அவரது காதல் கணவர் ராஜாவின் கோலத்தைப் பார்த்து உடைந்துபோய் நின்றுவிட்டார் விமலா. காரணம் 6 மாதங்களுக்கு முன்பு தன் கைகளை பிடித்துக் கொண்டு திருப்பூர் நகர வீதிகளில் நடந்து அழைத்துச் சென்றவரின் கால்கள் இரண்டும் இப்போது இல்லை. சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதவரிடம்,  ''நான் ஊருக்கு வந்து சிகிச்சை எடுத்தேன். ஆனால் ஒரு கால் என் பிறந்த நாள் அன்று கழன்று விழுந்துவிட்டது. அடுத்த சில மாதங்களில் மற்றொரு காலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அந்தக் காலையும் வெட்டி எடுத்துவிட்டார்கள். இப்போது என்னால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகக் கூட யாராவது துணை வேண்டும். நீ சின்னப்புள்ள இனிமேல் என்னுடன் உனக்கு வாழப்பிடிக்காது. உன் பெற்றோர் சொல்வதுபோல யாரையாவது திருமணம் செய்துகொண்டு நீயாவது சந்தோசமாக வாழ்க்கையை நடத்து'' என்று கண்கள் கலங்க சொன்னார்.

 

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட விமலா...''நமது காதல் உயிரோடு கலந்தது. வெறும் உணர்ச்சிகளுக்கானது மட்டும்மல்ல'' என்று சொன்னவர், ராஜாவின் சிறுநீர், மலம் வரை அள்ளி அவரை பராமரித்துக்கொண்டு கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் உண்மை காதலுக்கு சாட்சியாக 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

 

 'Lovers who lose their legs but never lose their love'

 

இந்த மனத்தூய்மையான காதல் தம்பதி பற்றிய நக்கீரன் இணைய செய்தி அறிந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கான செயற்கை கால்கள் கிடைக்க உதவினார். மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப் பட்டாவும், வீடுகட்ட உத்தரவும் வீட்டுக்கே சென்று வழங்கியதோடு, இத்தனை காலமும் கால்களை இழந்த காதல் கணவனை தன் குழந்தையைப் போல கவனித்துக் கொண்ட விமலாவை பாராட்டி சால்வை அணிவித்தார். இப்படி பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். இப்போது வீடு கட்டும் பணி தொடங்கி உள்ளது. அரசு நிதி மட்டும் போதாது வேறு யாராவது உதவினால் விரைவில் அழகான வீடு கட்டப்பட்டுவிடும். தொழில் செய்ய பெட்டியும் மளிகைப் பொருட்களும் வழங்கவும் தயாராக உள்ளனர் தன்னார்வலர்கள்.

 

காதலர் தினத்தில் ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட் என எத்தனையோ எடுத்துக்காட்டுகளை தேடி போற்றும் காதலர்கள், கால்களை இழந்தாலும் காதலை இழக்காமல் நிகழுலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜா-விமலா தம்பதியையும் காதலுக்கு இலக்கணமாக நினைத்து பாராட்டலாமே...

 

 

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.