Skip to main content

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... ஃபர்ஹானா படம் பார்த்து எஸ்டிபிஐ அறிக்கை!

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

sdpi about aishwarya rajesh in farhana movie

 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

 

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, "மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என அறிக்கை வெளியிட்டது. 

 

இதையடுத்து திருவாரூரில் உள்ள 1 திரையரங்கில் எதிர்ப்பின் காரணமாக இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இயக்குநர் அமீர், "இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தையும், 'ஃபர்ஹானா' திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை" என அறிக்கை வெளியிட்டார். அதோடு போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். 

 

இந்த நிலையில் இப்படத்தை இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுக்காக நேற்று சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பின்பு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கையில், "படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் .

 

ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு, இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ‘ஃபர்ஹானா' பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.   

 


 

சார்ந்த செய்திகள்