Skip to main content

ஏழை மாணவியின் கனவை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன் - ஆந்திர கல்வியாளர் வாழ்த்து.. 

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

siva

 

மிமிக்ரி கலைஞர், டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர், டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து உதவி வருகிறார். அது மட்டுமல்லாது இயற்கைப் பேரிடர் சமயம், கரோனா அச்சுறுத்தல் சமயம் என்று மக்கள் கஷ்டங்களை துடைக்க தன்னால் முடிந்த நிதியுதவியையும் சேவையையும் செய்து வருகிறார். 

 

இந்நிலையில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில், யாரின் ஆதரவும் இல்லாத நிலையில், பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஹானா, பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தான் விரும்பிய மருத்துவப் படிப்பை பயில முடியாமல் சிரமத்திற்கு ஆளானர். இதனைத் தொடர்ந்து மாணவி சஹானாவை, இந்தாண்டு தனது செலவில் நீட் கோச்சிங் பெற வைத்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில், மாணவி சஹானா, இந்த வருட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பை படிக்க இருக்கிறார். இதற்காக சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்தநிலையில், ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரும், படத் தயாரிப்பாளருமான பிரசாத் வி போட்லூரி, மாணவி சஹானாவையும், அம்மாணவியைப் படிக்க வைத்ததற்காக சிவகார்த்திகேயனையும் பாராட்டியுள்ளார். பிரசாத் வி போட்லூரி, கல்வி நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிரசாத் வி போட்லூரியின் வாழ்த்துக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், "தங்களின் அன்பான வார்த்தைகளுக்கும், சஹானாவின் கடின உழைப்பை அங்கீகரித்ததற்கும் நன்றி. இது எங்களை மிகவும் உத்வேகப்படுத்துகிறது. நீங்கள் சொன்னது போல் மனிதாபிமானம் தான் எல்லாம்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்