Skip to main content

"கரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்": பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தல் - நிபுணர்கள் கவலை!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

boris johnson

 

இங்கிலாந்து நாட்டில் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை ஜூன் 21ஆம் தேதி முழுமையாக நீக்க, அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருந்தார். ஆனால் டெல்டா வகை கரோனாவால், தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்தநிலையில், இந்த மாதம் 19ஆம் தேதிமுதல் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து இன்று (05.07.2021) அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டம் குறித்து அறிவிக்கவுள்ளார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து வெளியான அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மக்களின் சுதந்திரங்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இன்று நாம் முடிவு செய்யப்போகிறோம். பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் வைரஸோடு வாழக் கற்றுக்கொள்ள தொடங்க வேண்டும்" பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

"கட்டுப்பாடுகளை நீக்கினால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதை, சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன. ஆனால், தடுப்பூசியின் காரணமாக (கரோனா பாதிக்கப்பட்டவர்கள்) மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும், உயிரிழப்பதும் குறைந்துள்ளது" என பிரதமர் அலுவலகம் ஏற்கனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து விளக்கமளித்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அந்த நாட்டு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.