Skip to main content

தமிழ் மொழியை பாதுகாப்பது நம் கடமை! பினாங்கில் தமிமுன் அன்சாரி பேச்சு!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 

மலேஷியாவின் புகழ் பெற்ற பினாங்கு தீவில் ஜூலை 17ஆம் தேதி லீகாமுஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு தமிழ் அமைப்பின் பிரமுகர்கள் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA ஆகியோரின் சட்டமன்ற பணிகளை பாராட்டி வரவேற்பளிக்கப்பட்டது.
 

 

 

இதில் பங்கேற்று பேசிய தனியரசு, மலேஷியாவில் தமிழ் சமூகங்களின் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும், குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் உழைப்பு குறித்தும், விருந்தோம்பல் பண்பு குறித்தும், தமிழின் மீது காட்டும் ஆர்வம் குறித்தும் நகைச்சுவை ததும்ப பேசினார்.
 

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசும்போது, இது பினாங்கில் தான் பங்கேற்கும் ஐந்தாவது நிகழ்ச்சி என்றும், அதற்கு ஈமான் மற்றும் லீகா முஸ்லிம் போன்ற அமைப்புகளே காரணம் என்றும் நன்றி பாராட்டினார். 
 

மலேஷியாவின் பொருளாதார, வணிகம், பண்பாட்டு தளங்களில் இந்திய - தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பங்களிப்புகள் குறித்து சிலாகித்தார். 
 

 

 

எதிர்காலத்தில் மலேஷிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்றும், இதர தமிழ் சமுகங்களோடு அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழியை கடந்த காலத்தில் பாதுகாத்து வளர்த்தது போல, எதிர்காலத்திலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 

நிகழ்ச்சியின் இறுதியில், சமூக சேவகர் டத்தோஅப்துல்அஜீஸ் அவர்கள் இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அதுபோல லீகா முஸ்லிம் துணைத் தலைவர் சாகுல் ஹமீது, உதவித் தலைவர் அப்துல் காதர் ஹாஜாமெய்தீன், இளைஞர் பிரிவு தலைவர் முகம்மது நூர், ஈமான் பேரவை தலைவர் அமீர் அலி, வழக்கறிஞர் சாகுல் ஹமீது, பெர்சத்துவான் நூருல் இஸ்லாம் சங்க துணை செயலாளர் இஸ்மாயில் ஆகியோரும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
 

லீகா முஸ்லிம் துணை செயலாளர் ஜெய்னுல் ஆலம் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் பிரபல சுபைதா குழும உணவகம் சார்பில் விருந்தோம்பல் செய்யப்பட்டது. ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெண்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மதியம் புகழ் பெற்ற கப்பித்தான் தமிழ் பள்ளிவாசல், குயின்ஸ் ஸ்டீரிட் மாரியம்மன் கோயில், சூலியா தெருவில் உள்ள சீன ஆலயம், பிரபல செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்