
பாகிஸ்தானில் உள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் சமீப காலமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற விரைவு ரயிலை நேற்று முன் தினம் (11.03.2025) கிளர்ச்சிப்படையினர் கடத்தினர். அதாவது பலுசிஸ்தானின் மாக் பகுதியில் பெஷாவர் - குவெட்டா இடையே இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆயுதமேந்திய நபர்களால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டது. 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ரயிலில் பயணிகள், எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 450 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து இந்த ரயிலை கிளர்ச்சிப்படையினர் கடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகின. இந்த ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 27 பேரைச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்டோரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைத்தது.
இதனை தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக பாகிஸ்தான் சிறையில் உள்ள பலுசிஸ்தான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விடுவிக்காவிட்டால் அடுத்த 24 மணி நேரம் கழித்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு 5 பேர் கொல்லப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு பலூச் கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் 300க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளனர். ரயில் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300க்கு மேற்பட்டோரை பாகிஸ்தான் ராணுவம் துணிச்சலுடன் மீட்டுள்ளது. பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையிலான இந்த தாக்குதலில், பயணிகள் 21 மற்றும் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.