![incident two Palestinians for allegedly passing classified information to Israel](http://image.nakkheeran.in/cdn/farfuture/NGvPP0erD4Q-agzZ1uf6rr5-6eL40l6TMqBHgyveaWY/1701071454/sites/default/files/inline-images/993_338.jpg)
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 6 ஆம் தேதி மேற்கு கரை பகுதியில் உள்ள துல்ஹரம் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் முகாமில் பதுங்கி இருந்த அயுதக் குழு மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நடந்த இந்த மோதலில் 3 ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டனர்.
முகாமில் பதுங்கி இருந்த ஆயுத குழுக்கள் குறித்து ரகசிய தகவல் இஸ்ரேலுக்கு யார் கொடுத்தது என்று ஆயுதக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இரண்டு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாகக் கூறி அவர்களை கொன்று உடலை மின்கம்பத்தில் கட்டித் தொடங்விட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.