உயிரைக் கொடுத்து வளர்த்த பிள்ளையே, வயதான காலத்தில் வேண்டாத பொருளைப் போல் ஓரங்கட்டினால், முதியோர் இல்லத்துக்கு மூட்டை கட்டினால் பெற்றோர் என்ன செய்வது? அழுதுகொண்டோ… சபித்துக்கொண்டோ கிளம்பவேண்டியதுதான். அது நம்மூரில்…

அமெரிக்காவில் முதியோர் இல்லத்துக்கு தன்னை அனுப்பமுயன்ற மகனை சுட்டுக்கொன்றிருக்கிறார் ஓர் அம்மா. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகாணங்களில் ஒன்று அரிசோனா. அதன் தலைநகரம் போனிக்ஸ். இங்கு 92 வயதான அன்னா மே பிளஸ்ஸிங் தன் 72 வயது மகன், தன் மனைவியுடன் சேர்ந்து தன்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்பமுயன்றதற்காக சுட்டுக்கொன்றிருக்கிறார்.
அன்னா, மகனின் மனைவியையும் குறிபார்த்திருக்கிறார். துப்பாக்கியைத் தட்டிவிட்டு தப்பிச்சென்ற அவர் நகர ஷெரிப்பிடம் புகார்செய்ய, அன்னாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறது காவல்துறை. ஜாமீனில் அன்னாவை அனுப்ப ஐந்து லட்சம் டாலர் பிணையத் தொகை கேட்டு உத்தரவிட்டிருக்கிறாராம் நீதிபதி.
ஒருவேளை சிறைக்குப் போனபிறகு, பேசாமல் முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம் என அன்னா யோசிக்கக்கூடும்.