Skip to main content

இளம் பெண் போட்ட திட்டம்...டிரைவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...அதிர்ச்சியான போலீஸ்! 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவருக்கு வயது 51. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி விலக்கில் மொட்டாம்பாறை அடிவாரத்தில் பெரியாறு பிரிவு பாசன கால்வாய் உள்ளது. கடந்த மாதம் 15ஆம் தேதி அப்பகுதியில்நாகநாதன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணையில், அவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். நாகநாதனுக்கு  திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். 

 

young girl



இதனைத்தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கிய போது, அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் கடந்த 5-ந்தேதி ஒரு இளம் பெண் மற்றும் 2 வாலிபர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் குற்றாலம் செல்வதற்காக காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். அதன் பின்பு நாகநாதன் அந்த காரை ஓட்டியுள்ளார். அதோடு 9ஆம் தேதி அன்று தான் சென்னை திரும்பி வருவேன் என்றும் தகவல் கொடுத்துவிட்டு எடுத்து சென்றுள்ளார். நாகநாதன் சொல்லியபடி மூன்று நாட்களுக்கு மேலாகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

incident



அந்த புகாரில் டிரைவர் நாகநாதனுக்கு நான் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. திரும்ப போன் செய்த போது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் காருடன் சென்ற நாகநாதன் மாயமாகி உள்ளார். எனவே கார் கடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து, தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது நாகநாதன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். 


மேலும் அவரை கொன்றுவிட்டு, அவருடன் காரில் வந்த 4 பேர்தான் காரை கடத்திச் சென்றதும் தெரியவந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 4 பேரையும் கண்டுபிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெயசுதா (வயது 30), பெரோஸ் அகமது (34), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த ஹரிகரன் (30), காஞ்சீபுரம் வடகலையைச் சேர்ந்த ஜெகதீசன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் ஜெயசுதா பட்டதாரி பெண் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெரோஸ் அகமதுவும், ஜெயசுதாவும் ஒன்றாக படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் ஹரிகரன் பெரோஸ் அகமதுவின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.   

அதோடு சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்த ஜெயசுதா நாளடைவில் பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஓட்டல் நடத்தியுள்ளார். அந்த ஓட்டலில் தான் ஜெகதீசன் வேலை பார்த்து வந்தார். ஓட்டல் தொழிலில் இவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் சேர்ந்து கார்களை கடத்தி விற்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நாகநாதனை காரில் வரவழைத்து குற்றாலத்துக்கு செல்லும் வழியில் தனது தோழி ஒருவரை திருச்சியில் இருந்து ஜெயசுதா ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும் வழியில்தான் டிரைவர் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு காரை அவரிடம் விற்று விட்டு பின்னர் அவர்கள் 4 பேரும் அரசு பஸ்சில் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திரா, பெங்களூரு, கோவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சென்னை வரும் போது போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும் இது போல் வேறு சம்பவம் எதுவும் இவர்களால் நடந்துள்ளதா என்று போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.