Skip to main content

முன்னாள் காதலனை மறக்க முடியாது; புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
woman who incident her husband along with her ex-boyfriend

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு அருகே அமைந்துள்ளது பாலேகுளி ஊராட்சி. இங்குள்ள கூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமாா். 25 வயதான இவர் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ராம்குமாருக்கு திருமண வயது நெருங்கிய நிலையில் அவருக்கு வரன் பார்க்கப்பட்டு வந்தது. அதன்படி, ராம்குமாருக்கும் சூளகிரியை அடுத்த ஜோகிா்பாளையத்தைச் சோ்ந்த சுஜாதா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்தத் தம்பதி தங்களுடைய திருமண வாழ்க்கையைப் பிரகாசமாக தொடங்கிய சமயத்தில் இவர்களுக்குள் பல்வேறு முட்டல் மோதல்கள் நீடித்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தச் சமயத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் ராம்குமார்  - சுஜாதா தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையைத் தீர்த்து வைக்க முயற்சித்தனர். ஆனால், நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போனது.

இத்தகைய சூழலில், கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்த ராம்குமார் கழுத்தில் மின்சார ஒயர் இறுக்கிய நிலையில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் உயிரிழந்த ராம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கொலை செய்தது யார்? அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒருகட்டத்தில், போலீசாரின் சந்தேகம் மனைவி சுஜாதா மீது திரும்பியது. ராம்குமார் வீட்டில் ஆய்வு நடத்தும்போது சுஜாதா காட்டிய கள்ள மௌனமும் பதற்றமும், அவரை விசாரணை வளையத்தில் கொண்டுவர வைத்தது. 

இதனிடையே, சுஜாதாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில்.. பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சுஜாதாவுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு.. சூளகிரி அருகே உள்ள பீலாளம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்தக் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ராம்குமாரை திருமணம் செய்துகொண்டார். காதலனை மறக்க முடியாத சுஜாதா திருமணத்திற்கு பிறகும் கணேசனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில், இந்த விவகாரம் கணவர் ராம்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் திருமணத்தை மீறிய உறவை கைவிடும்படி கூறி மனைவியைக் கண்டித்துள்ளார். கணவரின் கண்டிப்பும் கட்டுப்பாடும் சுஜாதாவுக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. 

நாளுக்கு நாள் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை அதிகமாகவே தனது உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவெடுத்தார். சுஜாதா போட்ட திட்டப்படி வீட்டில் தனியாக இருந்த ராம்குமாரை தனது காதலன் கணேசன் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோருடன் சோ்ந்து அடித்தே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக, சுஜாதா, கணேசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கணேசனின் நண்பர் மோகன் ஆகியோரை கைது செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்