Skip to main content

மருத்துவமனையில் குழந்தையை விலை பேசிய பெண்! 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
woman took baby from hospital

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில், விழுப்புரம் ஜனகராஜ் நகரில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரின் மனைவி ஹேமலதா(25) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. 

ஹேமலதாவை 22 வயது பெண் ஒருவர் நேற்று வந்து சந்தித்து, தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு குழந்தையை பரிசோதிப்பது போல் செய்துள்ளார். பிறகு குழந்தையின் மீது போர்த்த துணியை எடுக்கச் சொல்லியுள்ளார். ஹேமலதா துணி எடுக்கத் திரும்பியபோது, அந்த பெண் குழந்தையுடன் மாயமானார். இதனால், ஹேமலதா அதிர்ச்சியடைந்து அழுதவாறே, அங்கிருந்தவர்களிடம் தன் குழந்தையையும், அந்த பெண்ணையும் பற்றி விசாரித்துக்கொண்டே மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றினார். பிறகு ஓரிடத்தில் தன் குழந்தையுடன் அந்தப் பெண் இருப்பதை அறிந்து, அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தன் குழந்தையை தருமாறு ஹேமலதா கேட்டுள்ளார். 

ஆனால் அந்தப் பெண், தனக்கு குழந்தை வேண்டும் என்றும் அதற்காக ஐந்து லட்சம் வரை தருகிறேன் என்றும் பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹேமலதா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் கூடி விசாரித்துள்ளனர். பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை பெற்று ஹேமலதாவிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், விக்கிரவாண்டி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். 

அந்தத் தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீஸார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் செஞ்சி அருகில் உள்ள ஈயங்குனம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி கோடீஸ்வரி என்பது தெரியவந்தது. அதேசமயம், விசாரணை செய்த மகளிர் போலீசாரிடம் கோடீஸ்வரி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை பார்த்ததும் இந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.