Skip to main content

விவகாரத்து கேட்ட கணவன்; கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற மனைவி 

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Wife beaten to passed away with cricket bat for asking about husband  divorce
விமல்குமார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வடபலம்பட்டியைச் சேர்ந்தவர் விமல்குமார் (37). தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பூர்ணமி (30). இவரும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு பூர்ணமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொடமாண்டப்பட்டியில்  உள்ள தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். பலமுறை விமல்குமார், தனது மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை தன்னுடன் வந்து வாழும்படி கேட்டுள்ளார். அவர் சமாதானம் ஆகவில்லை என்று தெரிகிறது. 

இதற்கிடையே விமல்குமாருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மனைவியை கடைசியாக ஒருமுறை அழைத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் மாமியார் வீட்டுக்கு விமல்குமார் பிப். 18ஆம் தேதி சென்றார். தன்னுடன் தனது தாயார் மகேஸ்வரியையும் சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்றிருந்தார். விமல்குமார் தனது மனைவி பூர்ணமியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போதும் அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை என்று  கூறப்படுகிறது. பின்னர் விமல்குமார் தனது மாமியார் அம்சவேணியிடம், உங்கள் மகளை குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்து  வாழச்சொல்லுங்கள். இல்லாவிட்டால், விவாகரத்து கொடுக்கச் சொல்லுங்கள். நான் வேறு திருமணமாவது செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Wife beaten to passed away with cricket bat for asking about husband  divorce
அம்சவேணி - பூர்ணமி

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பூர்ணமியும், அவருடைய தாயார் அம்சவேணியும் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து விமல்குமாரை சரமாரியாகத் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர், தனது தாயாரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற விமல்குமார் திடீரென்று மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த விமல்குமாரின் தாயார், இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்து, பூர்ணமி, அவருடைய தாயார் அம்சவேணி ஆகியோரைக் கைது செய்தனர். பெற்ற தாயின் கண் முன்னே மருமகளும், சம்பந்தியும் தனது மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.