Skip to main content

சேலம் மேயர் ரேஸில் முந்துவது யார்? தி.மு.க.வில் நீடிக்கும் சஸ்பென்ஸ்! 

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

 

Who is leading the Salem Mayor Race? Long lasting suspense in DMK!



சேலம் மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்பதில் தி.மு.க.வில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிப்பது, கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக 48 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 12 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.க. கூட்டணி 50 இடங்களை வென்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு மேயர் பதவியைக் கைப்பற்றி உள்ளது. 

 

மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க.வில் இந்தமுறை கடும் போட்டி நிலவுகிறது. மேயருக்கான யூகப்பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும், பதவிக்காக கட்சி மேலிடத்தை ஒவ்வொரு வழிகளில் வட்டமடித்து வருகின்றனர். 

 

சேலம் மாநகர தி.மு.க. அமைப்பாளரும், 28- வது வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமார் (வயது 50), மேயர் பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது. துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரான ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் நம்பிக்கைக்குரிய வட்டத்தில் இருப்பவர். பி.காம்., பட்டதாரியான ஜெயக்குமார், லாரி புக்கிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை ஜெயராமன், தொடக்க காலத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில் கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர். 

 

ஜெயக்குமார் மாநகர பொறுப்புக்கு வந்த பிறகு, வர்த்தகர்கள் நிரம்பிய செவ்வாய்பேட்டையில் கடந்த காலத்தில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரை மெல்ல மெல்ல நீங்கச்செய்தார். அதனாலும் மாவட்டச் செயலாளரின் குட்புக்கில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். உளவுப்பிரிவும், ஐபேக் டீமும் இவரைப் பற்றி நல்ல விதமாகவே கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அடித்திருக்கிறது.

 

இதையடுத்து, 18- வது வார்டு கவுன்சிலர் சர்க்கரை ஆ.சரவணன் (வயது 53) பெயரையும் மேயர் பதவிக்கு பலமாக உச்சரிக்கிறார்கள். ஏற்கனவே கவுன்சிலர், மண்டலக்குழுத் தலைவராக இருந்த அனுபவம் உள்ளவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சி காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிக்கக் கூடியவர் என மாவட்டச் செயலாளரிடம் பெயரெடுத்திருக்கிறார். கட்டட காண்டிராக்டர். கிளீன் இமேஜ்க்கு சொந்தக்காரர் என்பது இவருடைய பிளஸ் பாயிண்ட். 

 

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் பழுத்த அனுபவம் வாய்ந்தவரான 26- வது வார்டு கவுன்சிலர் எஸ்.டி.கலையமுதன் (வயது 79) பெயரும் மேயர் ரேஸில் அடிபடுகிறது. தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரான இவரும் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனின் குட்புக்கில் இருந்தாலும் கூட, வயது மூப்பு ஒரு தடையாக கவனிக்கப்படுகிறது. ஆனாலும் மேயர் பதவிக்கான ரேஸில்தான் கலையமுதனும் இருக்கிறார் என்கிறார்கள். 

 

இவர்கள் தவிர, 52- வது வார்டு கவுன்சிலர் 'அசோக் டெக்ஸ்' அசோகன், 56- வது வார்டு கவுன்சிலர் சரவணன், 15- வது வார்டு கவுன்சிலர் உமாராணி ஆகியோரும் மேயர் பதவியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

Who is leading the Salem Mayor Race? Long lasting suspense in DMK!

 

இது தொடர்பாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''கவுன்சிலர் உமாராணிக்கு, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் நல்ல நட்பு உள்ளது. அவருடைய மருமகன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு உமாராணி, மேயர் பதவியை கைப்பற்றிவிடுவார் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. 

 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கையில், சேலம் மாநகராட்சி மேயராகவும் ஒரு பெண்ணை அமர்த்துவதில் கட்சி ஆர்வம் காட்டாது. நிச்சயமாக இங்கு ஆண்தான் மேயர். அதனால் மேயர் ரேஸில் உமாராணி இல்லை என்று சொல்ல முடியும். அதேநேரம் அவர் துணை மேயர் அல்லது மண்டலக்குழுத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 

 

அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி இருக்கும்போது, அமைச்சர் அந்தஸ்தில் உள்ள மேயர் பதவியை, அவர் தனக்குக் கட்டுப்பட்ட ஒருவருக்கு வழங்கவே கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்வார். 

 

ஒருவேளை, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவின் தலையீட்டால் ராஜேந்திரனுக்கு எதிர் முகாமில் உள்ள ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் பட்சத்தில், அது மேயர் - மாவட்டச் செயலாளர் என இருதுருவ அரசியலாக மாறிவிடும். கட்சியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமாக இருக்காது. அதனால் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இருந்துதான் மேயர் பதவிக்கான பெயர்களை தளபதியும் 'டிக்' செய்வார்,'' என்கிறார்கள் தி.மு.க.வினர். 

 

மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் அல்லது சர்க்கரை ஆ.சரவணன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் ஆவதற்கான கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. எதுவாயினும் முதல்வர் கையில்தான் இறுதி முடிவு.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மார்ச் 2- ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். அன்றைய தினமே மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4- ஆம் தேதி நடக்கிறது. அதுவரை, புதிய மேயர் யார்? என்ற சஸ்பென்ஸ் தொடரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்