
செங்கல்பட்டு செல்வதற்காக கடற்கரை பணிமனையில் இருந்து 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது ரயில் மேடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 04.25 மணிக்கு வந்து கொண்டிருந்தது. ரயிலை பவித்ரன் என்பவர் ஓட்டிவந்தார். நிறுத்துமிடத்திற்கு அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேடை மீது ஏறி நின்றது. அப்போது, தீப்பொறி எழுந்ததுடன், பயங்கர சத்தமும் கேட்டுள்ளது.
இந்த விபத்தில் நடைமேடையில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத இருகடைகளும் நடைமேடையின் மேற்கூரையும் சேதமடைந்தன. ரயிலில் இருந்து குதித்த ஓட்டுநர் பவித்ரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, ஓட்டுநர் பவித்ரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஓட்டுநர் மிதித்ததே இந்த விபத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள ரயில்வே போலீசார், ஓட்டுநர் பவித்ரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.