Skip to main content

கர்ப்பமானதால் நடத்தப்பட்ட குழந்தைத் திருமணம்! -கணவன் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

viruthunagar district, aruppukottai womens police station


 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை – மடத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னராசுவும், சித்ராவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்தபடியே பழகினார்கள். சித்ரா கர்ப்பமானாள். சின்னராசு ‘சொந்தம்’ என்பதால், உறவினர்கள் கலந்துபேசி, இருவருக்கும் மணம் முடித்து வைத்தனர்.

 

கர்ப்பமான சித்ராவை, பிரசவத்துக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால் சின்னராசு கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார். ‘அதுதான் கணவன்- மனைவி உறவாகிவிட்டதே! பிறகு எதற்காக சின்னராசு மீது கைது நடவடிக்கை?’என்று கேட்டால், சித்ரா 14 வயது சிறுமி என்பதே,   காவல்துறையின் பதிலாக இருக்கிறது. 

 

16 வயதுக்கும் குறைவான சிறுமியுடன், அவரது அனுமதி பெற்று உறவு கொண்டாலும், அனுமதி பெறாமல் உறவு கொண்டாலும், அதுவும் பாலியல் வன்கொடுமை எனச் சொல்கிறது சட்டம். ‘18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியைத் திருமணம் செய்து பாலுறவு கொண்டால், அதுவும் பாலியல் வன்கொடுமையே’என்று தீர்ப்பளித்துள்ளது, உச்சநீதிமன்றம். அருப்புக்கோட்டை, மடத்துப்பட்டி சித்ராவோ, 14 வயதில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அதற்கு முன்பாகவே, அவளுடன் ‘உறவு’ வைத்திருந்தார், சின்னராசு. இருவருக்கும் உறவினர்கள் நடத்தி வைத்ததோ, குழந்தைத் திருமணம். சின்னராசு மீது பாய்ந்திருக்கிறது, போக்சோ சட்டம்!

 

சார்ந்த செய்திகள்