விழுப்புரம் மாவட்டம் காணைகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). இவரும் கருங்காலிப்பட்டை சேர்ந்த சரத்குமார் (27) என்பவரும். காணைஅரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார் காவல்துறையில் சேர்ந்து தற்போது விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸாராக உள்ளார். இந்த நிலையில் தற்போது விழுப்புரம் ரயில்வே காவல்நிலையத்தில் பெண் போலீஸாக பணி செய்து வரும் காணையை சேர்ந்த பிரியங்கா (27) என்பவர் ராஜலட்சுமியை போன் மூலம் தொடர்பு கொண்டு 'தான் சரத்குமாரை காதலித்து வருகிறேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இனிமேல் நீ அவரோடு பேச கூடாது பழக கூடாது' என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் ராஜலட்சுமியை அழைத்துச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த பெண் போலீஸ் பிரியங்கா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படையில் இருவரும் பணியாற்றிய போது அங்கு பணிபுரிந்த சரத்குமாரும் நானும் காதலித்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நெருங்கி பழகினோம். இதனால் நான் 4 முறை கர்ப்பம் தரித்து சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு செய்து கொண்டேன்.
தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். அப்படி உள்ள நிலையில் என்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமியை சரத்குமார் திடீர் திருமணம் செய்துள்ளார். இதை அவரிடம் நான்கேட்டதற்கு மிரட்டுகிறார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வரும் சரத்குமார் உறவினர் கீதா என்பவரும் சேர்ந்து கொண்டு என்னை தாக்கி மிரட்டுகிறார்கள். எனவே சரத்குமார், கீதா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ரேவதி சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார. இந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் சரத்குமாரையும் பெண் போலீஸ் பிரியங்காவைவும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். சிக்கலில் இருந்து தப்பிக்க நினைத்த போலீஸ்காரர் சரத்குமார் மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.