Skip to main content

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்..!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

வனத்துறையால் 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பொதுமக்கள் 1000 இ-போஸ்ட் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

வனத்துறையால் கடந்த 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பொதுமக்கள் 1000 இ-போஸ்ட் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

people struggle to repair the road ..!

 

சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையால் கடந்த 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம்  சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000இ-போஸ்ட் தயார் செய்து வைத்துள்ள பொதுமக்கள் முதற்கட்டமாக 100 மனுக்களை தாம்பரத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அனுப்பி வைத்து இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

people struggle to repair the road ..!

 

இதுகுறித்து குடியரசு தலைவருக்கு கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறுகையில், மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 14 கி.மீ கொண்ட ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. இச்சாலையை 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் காட்டூரிலிரிந்து அருங்கால் வரையிலும், இதுபோல் நல்லம்பாக்கத்திலிருந்து ஊளைமாஞ்சேரி கிரஷர் பகுதி வரையிலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை உள்ளதால் அதற்கு இரண்டு மடங்கு இடம் ஒதுக்கி கொடுத்தால்தான் நெடுஞ்சாலை  துறையினருக்கு சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என்று கூறி வனத்துறை குறுக்கிட்டுள்ளதால் மேற்படி சாலை அமைக்கும் பணி கடந்த 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது . 

 

 

இதில் மேற்படி சாலைகளில் இயங்கி வந்த வழித்தட எண் 60கே, 60டி என்ற தமிழக அரசு பேருந்துகளும், 55டி என்ற இரண்டு மாநகர பேருந்துகளும் கடந்த 10 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது . இதேபோல் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கி வைத்த எஸ்5 என்ற இரண்டு மினி மாநகர பேருந்துகளும் தற்போது கடந்த ஒரு வருடமாக மேற்படி தடத்தில் பஸ் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது . இதனால் காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், கல்வாய் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. மேலும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு பொதுமக்களாகிய எங்களை முட்டாளாக்கி வருகின்றனர். எனவே குடியரசு தலைவர் தலையிட்டு வனத்துறையின் முட்டுகட்டையால் கடந்த 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்