Skip to main content

கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

vellore gudiyatham husband and wife train incident 

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமம் அலங்காநல்லூர் மோட்டூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 50). இவரது மனைவி மல்லிகா (வயது 47). இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன்  மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என்ற கவலையிலும் இருந்து வந்துள்ளனர்.  இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளனர். கடன் தொல்லையால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு 8 மணியளவில் லத்தேரி - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு  இடையே உள்ள தண்டவாளத்தில் செல்லும் ரயில் தண்டவாளம் உள்ள பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் உடல் சிதறி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ், கணவன் மற்றும் மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்