Skip to main content

திருவிழா கடை ஏலத்தில் பங்கு கேட்கும் பிரமுகர்கள்... கண்டுகொள்ளாத நீர்வளத்துறை!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

vellore festival shops

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் கவுண்டன்யா நதியோரம் அமைந்துள்ளது பிரபலமான கெங்கையம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழாவை நடத்திட இந்து சமய அறநிலையத்துறையும், இந்த கோவில் பணிகளை முன்னின்று நடத்தும் கிராம விழாக்குழுவும் தீவிரமாக உள்ளது.

 

குடியாத்தம் நகராட்சியில் கடந்த வாரம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் திருவிழாவுக்கு நகராட்சிக்கு சார்பில் செய்யப்படும் பணிகளுக்கான செலவினத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிறப்பு தீர்மானமாக திருவிழாவின்போது 200 கடைகளுக்கு மேல் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இந்த கடைகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடக்கின்றன. அதனால் கடைகள் ஒதுக்குவதை டெண்டர் விடுவதை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் வாங்கி, ஆன்லைன் வழியாக டெண்டர் நடத்த வேண்டும், அப்படி செய்தால் அறநிலையத்துறைக்கு அதிகளவு வருமானம் வரும் என நகராட்சி ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானங்களை கண்டித்து இந்து அமைப்புகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றன.

 

கடைகளை ஏலம் விடுவது இந்து சமய அறநிலையத்துறை. கடைகளை ஆன்லைன் வழியாக ஏலம் நடத்துங்கள் எனக்கேட்க வேண்டியது ஏலத்தில் பங்குபெறுபவர்கள். ஆனால் அதற்கு சம்மந்தமே இல்லாத நகராட்சி தரப்பில் தீர்மானம் இயற்றுவது வியப்பாக இருக்கிறது என்கிறார்கள் பலரும்.

 

vellore festival shvellore festival shopsops

 

கெங்கையம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்கிறது. ஆனாலும் கோவில் பணிகளை, விழாக்களை நடத்த தனியே கிராம கமிட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நீண்ட ஆண்டுகளாக இருந்தவர் இதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த கோவிந்தராஜ். அவரது மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் செய்து வருகிறது. திருவிழா முடிந்ததும் கோவிலுக்காக வசூல் செய்யப்படும் பணம் சரியாக கணக்கு காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டை ஒவ்வொரு ஆண்டும் சிலர் எழுப்புவார்கள், பின்பு அது அடங்கிவிடும். இந்தாண்டு கோவிந்தராஜ்யின் குடும்பத்தைச் சேர்ந்த தேவகிகார்த்திகேயன் திமுக சார்பில் நகராட்சி தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து நின்ற பாமக வேட்பாளர் தோல்வியை சந்தித்துள்ளார்.

 

அவர்தான் சிலருடன் சேர்ந்து கோவில் கிராம கமிட்டிக்கு எதிராக நகராட்சியில் உள்ள சில திமுக கவுன்சிலர்களை தூண்டி விடுகிறார். அதற்கு காரணம், இந்து சமய அறநிலையத்துறை கடைகளை ஏலம் விட்டாலும், கடை எடுப்பவர்கள் கோவில் விழா கமிட்டிக்கு தனியாக கப்பம் கட்டவேண்டும். அப்படி வரும் நிதியில் பங்கு வேண்டும் என எதிர்பார்த்தே அந்த கவுன்சிலர்கள், மன்ற கூட்டம் வரை இந்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்கிறார்கள்.  

 

vellore festival shops

 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது, உண்டியல் வருமானம் அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. திருவிழாவுக்கான தொகையை அறநிலையத்துறை மிகக்குறைவாகவே ஒதுக்குகிறது. அந்த பணத்தை வைத்து சரியாக திருவிழா நடத்த முடியாது என்பதாலே ஊர் மக்களிடம் வசூல், வியாபாரிகளிடம் நன்கொடை பெறப்படுகிறது. அதைக்கொண்டே அன்னதானம், வானவேடிக்கை உட்பட பலவற்றை செய்கிறோம் என்கிறார்கள்.

 

தற்காலிக கடை வசூல் தொகைக்காக முட்டிக்கொள்ளும் இவர்கள் ஒரு விவரத்தைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள். திருவிழாவின்போது வரும் கடைகள் எல்லாமே கவுண்டன்யா நிதி ஆற்றில்தான் அமைக்கப்படுகிறது. அது நீர்வளத்துறை அதாவது பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம். கடைகள் அமைக்கப்படும் இடத்துக்கும் அறநிலையத்துறைக்கும், நகராட்சிக்கும் எந்த சம்மந்தமும்மில்லை. கடைகள் வைக்க அந்த இடத்துக்கு டெண்டர் விடவேண்டும், வரிவசூல் செய்ய வேண்டும் என்றால் நீர்வளத்துறையோ, பொதுப்பணித்துறையோ தான் செய்யவேண்டும்.

 

நீர்நிலை பகுதிகளில் தற்காலிக கடை வைக்க நீர்வளத்துறை அனுமதி வழங்கமுடியாது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அறநிலையத்துறை ஏலம் விட்டு பணம் பார்த்து வருகிறது என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சேற்றில் குளித்து சிலம்பம் சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்.. வியக்க வைக்கும் திருவிழா!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.

பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.