![Vande Bharat train between Chennai Nellai Release of fee details](http://image.nakkheeran.in/cdn/farfuture/uNSoAM_0cVgj4l_zCq7YDMnJGl-g3JsQGlGN7TV7P2Y/1695403549/sites/default/files/inline-images/vande-barat-file.jpg)
சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த அதிநவீன ரயிலை பிரதமர் மோடி வரும் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு மதியம் 1:50 மணிக்குச் சென்றடையும். 652 கி.மீ தூரத்தை 7 மணிநேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே சமயம் மறு மார்க்கமாகச் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2:50 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:40 மணிக்குத் திருநெல்வேலிக்குச் சென்றடையும்.
இந்நிலையில் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்களைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சொகுசு வகுப்புக்கு ரூ. 3,025 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு, ஜிஎஸ்டி, அதிவிரைவு கட்டணம், முன்பதிவு என அனைத்துக் கட்டணங்களும் அடங்கும். அதே போன்று சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.