
ஈரோடு, பெரியார் நகர் ஆர்ச் அருகில் உள்ள பழைய ‘சி’ டைப் குடியிருப்பின் பின்புறம், ஆண் ஒருவர் விழுந்து கிடப்பது அப்பகுதியினருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். உயிரிழந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கும். ஆனால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக மது போதையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த அந்த நபர், யாரும் வசிக்காத பாழடைந்த கட்டடத்தில் தங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர், சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், அவர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.