Skip to main content

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பல லட்சங்கள் கைமாறிதா?-வெளியான திடுக்கிடும் தகவல்கள்!  

Published on 21/09/2019 | Edited on 13/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் இவருடைய மகன் உதித் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் மும்பையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்று விட்டு தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு சேர்ந்து  எம்பிபிஎஸ் படித்து வந்தார். 

இந்த நிலையில் தான் நீட் தேர்வை உதித்சூரியா ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாக தெரியவந்தது அதனடிப்படையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கானாவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உதித்சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய நபர் மீதும் மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதனடிப்படையில் உதித்சூரியா மற்றும்  ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதிய நபரையும் பிடிக்க மூன்று தனிப்படைகளை எஸ்பி பாஸ்கரன் அமைத்தார். 
 

udit surya neet issue


 

அதன் பேரில் அந்த தனிப்படை சென்னைக்கு சென்று தேடி வருகின்றனர் ஆனால் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மற்றும் குடும்பத்தார் இந்த விஷயம் தெரிந்து தலைமறைவாகிவிட்டனர் அப்படி இருந்தும்  அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த ஆள்மாறாட்டம் சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்டமாக இந்த அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரின் பேரில் வெளியே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்னஞ்சல் அனுப்பிய அசோக் கிருஷ்ணன் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவருக்கு எப்படி இந்த விவரம் தெரியவந்தது அவரை ஏன் புகார் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன.  இதனால் அசோக் கிரூஷ்ணன் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை வைத்து தனிப்படை போலீசார் எந்த மின்னஞ்சலில் இருந்து அனுப்பபட்டது என்றும் அனுப்பியவர் குறித்தும் தகவலையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாணவன் உதித்சூரியாவோ தேனி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது சக மாணவர்களிடம் தான் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரத்தை உளறியதாகவும் தன்னுடன் மேலும் ஐந்து மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் பேரில் உதித் சூர்யா தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள் அவருடன் அறையில் தங்கிய சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் அதோடு மருத்துவ துறை அதிகாரிகளும் விசாரணை  நடத்தி வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீர் தேர்வு எழுதியுள்ளார் அந்த தேர்வு மையத்தில் அவருடன் சேர்ந்து மேலும் பலர் பயிற்சி பெற்று தேர்வு எழுதியுள்ளனர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 
இதனால் மும்பை பயிற்சி மையத்திற்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்ச ரூபாய் கை மாறியதாக கூறப்படுகிறது பயிற்சி மையம் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உள்பட  பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது எனவே மும்பையில் சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர். அதுபோல் தேர்வு முடிந்த பின்னர் நடந்த கலந்தாய்வில் உதித் சூர்யாதான் பங்கேற்றார?அல்லது நீட் தேர்வு எழுதிய எழுதிய நபர் பங்கேற்றரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது உதித் சூர்யா கலந்தாய்வில் பங்கேற்று இருந்தால் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படத்திற்கு உதித் சூர்யாவுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவில்லையா? அல்லது கலந்தாய்வில் உதித் சூர்யா பங்கேற்காத பட்சத்தில் அவருடைய சான்றிதழ் அடையாள ஆவணங்களை சரிபார்ப்பு பணியின்போது கோட்டை விட்டது ஏன் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 


அதுபோன்று கலந்தாய்வு மற்றும் கலந்தாய்வு முடிந்த பின்னர் உதித் சூர்யாவுக்காக ஆவணங்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது எனவே உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் சிக்கினால் தான் பல்வேறு மர்மங்கள் மர்ம முடிச்சுகள் வெளிவரவும் வாய்ப்பு உள்ளது.



மேலும் இந்த ஆள்மாறாட்டம்  சம்பவத்தில்  சில அதிகாரிகளுக்கும்  தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில  ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்ததால் இருவரும் நண்பர்களாக இருந்தும் இருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது இப்படி மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் நடந்த  முறைகேடு தொடர்பாக இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் பரவலாக எதிரொலித்து வருகிறது.

சார்ந்த செய்திகள்