Skip to main content

கணவர் தற்கொலை; கதறி அழுத மனைவி

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

trichy issue husband son mother srirangam police 

 

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார்.  இவர்களுடன் கார்த்திகேயனின் தாயும் வசித்து வந்துள்ளார். கார்த்திகேயன் 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கார் டிரைவராக வேலைக்குச் சென்றார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவரது மனைவி  தனியார் கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திகேயனின் மனைவி, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை என்பதாலும் உடனே பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றிக் கூறியுள்ளார். கல்லூரி மாணவர் ஒருவர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கார்த்திகேயன், அவரது தாய், அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் கீழே இறங்கி வந்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியவர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடலைக் கண்ட  கார்த்திகேயனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல. தாய், மகன் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி  மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக கார்த்திகேயன், தாய் மற்றும் மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.