Skip to main content

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும்! அன்புமணி கண்டனம்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018
anbuma


காவிரி சிக்கலில் கூடுதல் கெடு கோருவதா? மத்திய அரசின் தீய நோக்கம் அம்பலமானது என கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான  செயல்திட்டத்தை  உருவாக்க கூடுதலாக இரு வார கால அவகாசம் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு   புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத் தேர்தலில் அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்காகவே காவிரி செயல்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகியிருக்கிறது.
 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் 2007-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள்ளாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய ஆட்சியாளர்களின் சித்து விளையாட்டுக்களால் அதன்பின் 11 ஆண்டுகளாகியும் இன்று வரை வாரியம் அமைக்கப்படவில்லை.  கடந்த மார்ச் 29-ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் புதிய செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி ஆணையிட்ட நிலையில், அதையும்  மதிக்காத மத்திய அரசு, இப்போது கூடுதலாக இரு வார அவகாசம் கோரியிருப்பதை ஏற்க முடியாது.
 

மத்திய அரசின் இந்நடவடிக்கை முழுக்க முழுக்க தீய நோக்கமும், அரசியல் உள்நோக்கமும் கொண்டதாகும்.  காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைய வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. மே 3-ஆம் தேதிக்குள் காவிரி செயல்திட்டத்தை தாக்கல் செய்தால் அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்  என்பதால் தான் இந்த வழக்கில் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோருகிறது. அவ்வாறு கூடுதலாக இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டால் அதற்குள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிடும்; அதன்பின்னர் விருப்பம் போல் செயல்திட்டத்தை தயாரிக்கலாம் என்பது தான் மத்திய அரசின் திட்டமாகும்.
 

மத்திய அரசின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக தள்ளுபடி செய்து, மே 3-ஆம் தேதிக்குள்  காவிரி செயல்திட்டத்தை தாக்கல் செய்யும்படி மீண்டும் ஆணையிட்டிருக்க வேண்டும்.  அவ்வாறு செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் இருந்த தமிழக வழக்கறிஞர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த மனுவும் வரும் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதே தமிழகத்திற்கு பாதகமான விஷயமாகும். இது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் செயலாகும். இந்த மனுவும் வரும் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதால் அதுவரை வரைவுச் செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாது.  உடனடியாக வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த  முடியாது. இறுதியில் மத்திய அரசு கோரியவாறு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு ஏற்படுத்தும். அதன்பின் காவிரி மேலாண்மை வாரியம் எப்போது, எத்தகைய அதிகாரங்களுடன், எந்த வடிவத்தில் அமைக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
 

மே மாதம் 3&ஆம் தேதிக்குள் வரைவுச் செயல்திட்டம் தாக்கல் செய்யப்படாவிட்டால், அடுத்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. இதனால் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்படும். இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
 

அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அரசு, ஒரு மாநிலத்தில் அரசியல் லாபம் தேடுவற்காக இன்னொரு மாநிலத்தில் நலன்களை பறிகொடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்திற்கு எத்தகைய துரோகம் செய்வதற்கும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தயங்காது என்பதைத் தான் இது காட்டுகிறது. காவிரி செயல்திட்டத்தை தயாரிக்க ஒருநாள் போதுமானது எனும் நிலையில் மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கோருவது தமிழகத்திற்கு நீதி கிடைப்பதை தடுக்கும் செயலாகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தமிழக நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.