திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரத்தில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் செங்கம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரே சாலையோரம் நெடுஞ்சாலை இடத்தில் மார்ச் 15ந்தேதி இரவு திடீரென மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை பீடம் கட்டி வைக்கப்பட்டது.
அ.தி.மு.கவின் செங்கம் ஒன்றிய மகளிர் அணி துணைசெயலாளர் ஷகிலா ஏற்பாட்டில் அந்த சிலை வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிலை வைத்தது தெரியவந்தது. இந்த தகவல் செங்கம் வட்டாச்சியர் பார்த்தசாரதிக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியான அவர் இதுப்பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆட்சியர் கந்தசாமிக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து அந்த சிலையை உடனே அகற்றுங்கள் என உத்தரவிட்டனர்.
அதன்படி மார்ச் 16ந்தேதி காலை வட்டாச்சியர் பார்த்தசாரதி செங்கம் காவல்துறைக்கு மனு தந்தார். பத்துக்கும் அதிகமான போலீஸார் அங்கு குவிந்தனர். பேரூராட்சி ஊழியர்களின் உதவியோடு ஜெயலலிதாவின் சிலையை அங்கிருந்து அகற்றி டாடா ஏசி வாகனத்தில் ஏற்றிச் சென்று வருவாய்த்துறை அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதுப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.