Skip to main content

குடியை கெடுத்த குடி! தாய்க்கு சித்ரவதை... தந்தைக்கு எமனான மகன்!

Published on 09/06/2022 | Edited on 09/06/2022


 

tasmac liquor father and son incident police investigation

 

நாமக்கல் அருகே, தினமும் குடிபோதையில் தாயை அடித்துச் சித்ரவதை செய்து வந்த தந்தையை, பெற்ற மகனே அடித்துக் கொலை செய்தார்.

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபனையைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தையல்காரராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுடைய மகன் கவின் (வயது 23). இரண்டு மகள்களும் உள்ளனர். 

 

பழனிசாமிக்கு, மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தினமும் இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று, மனைவி, பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) இரவு 10.00 மணியளவில், வழக்கம்போல் பழனிசாமி மது போதையில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். 

 

வீட்டில் மனைவியுடன் தகராறு செய்ததோடு, அவரை அடித்து உதைத்துள்ளார். தாயார் தாக்கப்படுவதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவருடைய மகன் கவின் (வயது 23), தந்தையை பிடித்து கீழே தள்ளினார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்த பழனிசாமியை, அவரின் தலைமுடியைப் பிடித்து தரையில் பலமுறை பலமாக மோதியுள்ளார் கவின். 

 

இதில் பழனிசாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். 

 

சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த கவினையும் கைது செய்தனர். 

 

தினமும் குடிபோதையில் வரும் தனது தந்தை, தாயாரை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து வந்ததைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் கவின், தனது தந்தையை அடித்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்