Skip to main content

மகனை இழந்த சோகத்தில் தந்தை செய்த அமானுஷ்ய பூஜை

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Supernatural pooja performed by a father in grief of losing his son

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் சொரக்காயல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவருக்குத் திருமணம் முடிந்து நீண்ட கால வேண்டுதலுக்குப் பிறகு 2 மகன்கள் பிறந்ததால் அவர்களை மிகுந்த பாசத்தோடு கேசவன் வளர்த்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இளைய மகன் உதய் வசந்த், ஊரில் உள்ள ஏரிக்கரை மீது பைக்கில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மன வேதனையிலிருந்த குடும்பத்தினர், சாமியாரிடம் சென்று இந்த துயரத்திலிருந்து மீள்வதற்கான வழியைக் கேட்டுள்ளனர். இறந்தவரின் ஆன்மா அமைதியின்றி சுற்றித் திரிவதாகவும், அந்த ஆன்மாவை குடும்பத்துடன் சேர்த்துவிட்டால் அமைதி கிடைத்துவிடும் எனச் சாமியார் தீர்வு சொல்லியிருக்கிறார். 

 

இதனையடுத்து தங்களது மகனை குடும்பத்துடன் சேர்த்து வைக்கத் தேவையான பூஜையை நடத்த கேசவன் முடிவெடுத்துள்ளார். அமாவாசையை அடுத்த மூன்றாவது நாள் இதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்த பூஜையில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றிருக்கின்றனர். மேள தாளம் முழங்க ஏரிக்கரைக்குச் சென்ற குடும்பத்தினர் பூங்கரகம் எடுத்து மஞ்சள், குங்குமம் தெளித்து வழி நெடுக பூ தூவி சென்று விபத்து நடந்த இடத்தில் மந்திரம் ஓதி, சிறு வயதிலிருந்து தனது மகனுக்குக் காட்டிய அன்பை நினைவுபடுத்தி அவரை அழைத்தனர்.  நான்கு புறமும் எலுமிச்சை பழத்தை வெட்டி வீசி சாமி ஆடி மகனை அழைத்த உறவினர்கள், மீண்டும் அங்கிருந்து மேள தாளம் முழங்க வீடு திரும்பினர். வரும் வழி முழுவதும் எலுமிச்சை பழமும், மஞ்சள் நீரும் தெளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சடங்கை முதல் முறையாகப் பார்த்தவர்கள் சற்று பயத்தில் உறைந்துபோயுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்