மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களைச் சந்தைப்படுத்த சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளதையொட்டி, முன்பதிவு செய்து கொள்ள குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ’சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்யும் பொருட்டு, அதனைச் சந்தைப்படுத்த 2022&2023ம் ஆண்டு மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் மாதத்தில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் மாநில அளவிலான கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்களுடைய தீர்மான நகல், உற்பத்தி செய்யும் பொருள்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி பொருள் குறித்து ஏதேனும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அப்பதிவுச் சான்று, உற்பத்தி மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரத்துடன் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), அறை எண்: 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் - 636001 என்ற முகவரியில் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.’ இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.