Skip to main content

காங்கிரஸ் மாவட்டத் தலைவரின் மரணம் தற்கொலையா?; நெல்லை மாவட்ட போலீசார் தகவல்

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Nellai District Police Information Is Congress District President's incident

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகை சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதே சமயம் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் இருந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

Nellai District Police Information Is Congress District President's incident

முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயக்குமாரின் இந்தக் கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீசார், சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனையடுத்து நெல்லை மாவட்ட போலீசார் தெரிவிக்கையில், ‘ஜெயக்குமாரை கொலை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. தற்போது கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவில் முழு விவரங்கள் தெரியவரும்’ எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்