Skip to main content

'தொடர்ந்து தலைவலிதான்'- அமைச்சர் செங்கோட்டையன் வேதனை!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

மத்திய பாஜக அரசு தனது கொள்கை நிலைப்பாட்டை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளது. அடுத்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்யவுள்ளது. இது இந்தியா முழுக்க தொடர்ந்து எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது.

பாஜக அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தமிழகத்தின் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்று இந்திய பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக வருகிற 16-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் பேசுவதாகவும், அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் உரையை நேரடியாக கேட்பதற்கு பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கை மாநில அரசிற்கு வந்துள்ளது.

 

sengottaiyan in mind upset

 

இந்த அறிக்கையை மாநில அரசும் ஒவ்வொரு கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை. குறிப்பாக 16 ஆம் தேதி உழவர் திருநாள். இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கல்வித்துறை அமைச்சர் வரை, அந்த நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்கள். 

 

sengottaiyan in mind upset


இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போது, அவர், 

இந்த அறிவிப்பு எல்லாம் சரியாக படவில்லை. எதற்காக இந்த பாஜக அரசு இப்படி தொடர்ந்து செய்கிறது என்று தெரியவில்லை. நாமும் இந்த ஆட்சிக்கு எவ்வளவுதூரம் பணிந்து போகிறோம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியா முழுக்க பற்றி எரியும் போது கூட தமிழக அரசின் சார்பில் நாம் ஆதரவாக வாக்களித்ததால் தான் அந்த மசோதாவே நிறைவேறியது.

இதுவெல்லாம் பாஜக அரசிற்கு தெரியும். இந்நிலையில் திடீரென்று இப்பொழுது பிரதமர் மோடி உரையாற்றுகிறார் அதை கேளுங்கள் என்று பள்ளிக் குழந்தைகளை பொங்கல் நாளில் அவர்களை வரவைத்து கேட்க வைப்பது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லாத ஒன்று.

 

sengottaiyan in mind upset


இவர்களுடைய செயல்பாடுகள் மிகப்பெரிய தலைவலியை நமக்கு ஏற்படுத்தி உள்ளது. இதை திமுக உட்பட மற்ற கட்சிகள் அரசியல் ரீதியாக எதிர்க்கிறது என்றாலும் நாம் எதையும் பேச முடியாத சூழலில் இருக்கிறோம். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி அதற்கு முந்திய நாள் தைப்பொங்கல் தமிழர் திருநாள், அதைத்தொடர்ந்து உழவர் திருநாள் இவையெல்லாம் தமிழகத்தினுடைய சிறப்பு நாளாக இருக்கிறது.

 

sengottaiyan in mind upset


இதை தெரிந்து கொண்டே அந்த நாளில் பிரதமர் உரையாற்றுகிறார். நீங்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அழைத்து வரச் சொல்வது எந்த விதத்தில் நியாயமானது. இதை தமிழக பாஜக கூட அவருக்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம். அதேபோல் தொடர்ந்து இந்த மாதிரியான நிலைகளை அவர்கள் தெரிவிப்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது என அவர் கட்சிக்காரர்களிடம் கலந்துகொண்டாராம்.

இதுபற்றி அதிமுகவினர் நம்மிடம் கூறும்பொழுது, நீண்ட நாட்களாக இந்த ஆட்சியை கொண்டு போவதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தங்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு போகிறார்கள். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் எந்த பிரச்சனையும் செய்யாமல் எம்ஜிஆருக்காக, ஜெயலலிதாவிற்காக விசுவாசமாக நடந்து வருகிறார். இன்று அவர் எங்களிடம் பேசியது அவரது, மனக்குமுறலை தெரிவித்தது எங்களுக்கு உண்மையிலேயே வேதனை அளிப்பதாக இருந்தது என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.