Skip to main content

கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

salem rowdy incident police investigation

 

சேலம் அருகே, கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

 

சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (வயது 26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சிக்கு கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார். 

 

திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ரம்யாவுடன் சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திருநாவுக்கரசு குடியேறி விட்டார். இந்நிலையில், டிசம்பர் 17- ஆம் தேதியன்று தனது மாமனார் சபரி மலைக்குச் செல்ல இருந்ததால்,  அவரை வழியனுப்பி வைப்பதற்காக சொந்த ஊரான நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார். 

 

அதே ஊரைச் சேர்ந்த தனது பழைய கூட்டாளியான சரவணன் என்பவருடன் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது,  திடீரென்று அவர்களை 15 பேர் சுற்றி வளைத்து கல்லால் தாக்கியும், சூரிக்கத்தியாலும் தாக்கினர். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2019- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமார் என்பவரை திருநாவுக்கரசுவும், அவருடைய கூட்டாளிகளான சரவணன், சூர்யா என்கிற மற்றொரு சரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர். 

 

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில்தான் தற்போது திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழன்பன் (வயது 35), தங்கவேல் (வயது 34), குமரேசன் (வயது 32) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறைகளில் அடைத்துள்ளனர். இவர்களில், 17 வயதான இரண்டு சிறுவர்களும் உள்ளனர். 

 

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவா என்கிற பரமசிவம் (வயது 25), ரஞ்சித்குமார் (வயது 25), விக்னேஷ் (வயது 25) ஆகிய மூவரும் டிச. 22- ஆம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

திருநாவுக்கரசு கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களுள் சிவா என்கிற பரமசிவம்தான் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.