Skip to main content

கந்துவட்டி கொடுமை; விபரீத முடிவெடுத்த தம்பதியினர் 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

salem azhagapuram over interest married couple incident 

 

சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). இவருடைய மனைவி சாந்தி (வயது 56). இவர்களுக்கு ராம கவுண்டர், ராமவேல் ஆகிய இரு மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன், பெரிய புதூரில் சொந்தமாக சைக்கிள் கடை வைத்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டில் ராஜேந்திரன் உள்பட 9 பேர் கூட்டாக சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. அதில், ராஜேந்திரனின் பங்காக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (24.01.2023) அதிகாலை 5 மணியளவில், ராஜேந்திரனின் இளைய மகன் ராமவேல், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, பெற்றோர் தங்கியிருந்த அறைக் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது, அறைக்குள் தாயும், தந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

 

இதைப் பார்த்த அதிர்ச்சியில் ராமவேல் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதை திருப்பிச் செலுத்த முடியாததால்  அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு 19 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வங்கி கடன் நிலுவையை செலுத்திய ராஜேந்திரன், வங்கியில் இருந்து வீட்டு பத்திரத்தையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பத்திரத்தை நடேசனிடம் வாங்கிய கடனுக்கு அடமானமாக கொடுத்துள்ளார். அசலாக 19 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதற்கு  21 லட்சம் ரூபாய் வட்டியுடன் மொத்தம் 40 லட்சம் ரூபாய் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் மிரட்டி வந்துள்ளனர்.

 

ஆனால் நடேசனிடம் வாங்கிய கடன் அசல், வட்டி ஆகியவற்றை அவர் சரியாக திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் அசல், வட்டி, வட்டிக்கு வட்டி என கடன் சுமை அதிகரித்துள்ளது. இதற்கிடையே நடேசனும் அவருடைய குடும்பத்தினரும் கடன் பாக்கிக்காக ராஜேந்திரனின் வீட்டை தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி அவரை தொந்தரவு செய்து  வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவும் நடேசன் தரப்பினர் அவரிடம் கடன் தொகையை திருப்பிக் கேட்டு ஆபாச சொற்களால் திட்டி விட்டுச் சென்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டு வாசலில் நின்றபடி ஆபாசமாக திட்டி விட்டுச் செல்வதால் ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் மனம்  உடைந்த நிலையில், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதையடுத்து அவர்கள் சம்பவத்தன்று இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தம்பதியினர் இறந்து கிடந்த அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்து ராஜேந்திரன் கைப்பட எழுதிய ஒரு தற்கொலை குறிப்பு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், ''எங்கள் சாவுக்கு நடேசன், அவருடைய மகன்கள், மகள், மருமகன் உள்ளிட்ட 6 பேரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து நடேசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர், உள்ளூரைச் சேர்ந்த உலகநாதன் என்பவரிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அந்தப் பணத்தை நடேசன் கூடுதல் வட்டிக்கு ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு கடன் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து நடேசன், உலகநாதன் ஆகிய இருவர் மீதும் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.