Skip to main content

இலங்கை அனுப்பினால் நால்வரின் உயிருக்கு ஆபத்து; தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க முதல்வருக்கு வேண்டுகோள்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

request Chief Minister allow four including Murugan live Tamil Nadu

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 4 பேரையும் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முப்பத்திரண்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் விடுதலை செய்த முருகன், சாந்தன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகிய நால்வரையும் தமிழ்நாடு அரசு திருச்சி நடுவண் சிறையிலுள்ள சிறப்புக் காவல் முகாமில் அடைத்துள்ளது. இந்நிலையில், இன்று (14.11.2022) ஊடகவியலாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இந்நால்வருடைய சொந்த நாடான இலங்கையிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, இந்நால்வரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. 

 

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள பௌத்த இனவாதிகள் ஆட்சியிலும், வெளியிலும் இருக்கிறார்கள். அவர்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து உள்ளார்கள். மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பு இன்று இல்லாத நிலையிலும் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்; அல்லது காணாமல் போனவர்கள் என்று காரணம் சொல்லி சிங்கள ஆட்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றிருக்கிறார்கள்.

 

இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்த நால்வரும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவர்கள் என்பது இந்திய அரசின் குற்றச்சாட்டு. இப்பொழுது, 2009க்குப் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை. அதன் செயல்பாடுகளும் இல்லை. ஆனாலும், அந்தப் பெயரை வைத்துக்கொண்டு தமிழர்களை இலங்கை சிங்கள அரசு இன்றும் பழிவாங்கி வருகிறது. 

 

தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் இந்நால்வரையும் இலங்கைக்கு அனுப்பினால், நேரடியாக அவர்களைச் சிறையில்தான் அடைப்பார்கள். அவர்களுடைய உயிருக்கும் ஆபத்து நேரலாம். இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் செயல்படுத்தப்படாத ஒன்றாகிவிடும்.

 

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இங்கே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வருபவர்களும் அகதி முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கைக்கு வசதி ஏற்படுத்தித் தருகிறது தமிழ்நாடு அரசு. இந்நால்வரையும் அதுபோல், இலங்கையிலிருந்து வந்த ஏதிலியராக ஏற்று, மற்ற ஈழத்தமிழர்கள் பெற்றுள்ள வாழ்வுரிமையை இவர்களுக்கும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும். இவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. இதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து, மேற்படி நான்கு தமிழர்களையும் பாதுகாக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒருவேளை இவர்களுடைய உறவினர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பினால், தமிழ்நாடு அரசு அதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடரும் அத்துமீறல்; மீண்டும் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
continuing trespass; 21 fishermen captured again

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை மீண்டும் கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் இரண்டு விசைப்படகு களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.