Skip to main content

சாதாரண ஆள் இல்ல இவரு... தற்கொலைக்கு முயன்றவரையே காப்பாற்றியவரு... மாணவனைப் பாராட்டிய எஸ்.பி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

மன அழுத்த மிகுதியால் எட்டாம் வகுப்பு மாணவன் புளியமரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மரம் ஏறி அவனைக் காப்பாற்றியுள்ளான் சக மாணவன் ஒருவன். சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ மாணவனை நேரில் அழைத்து அவனுடைய வீரத்தைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

RAMANATHAPURAM POLICE COMMISSIONER VARUN KUMAR  SP congratulated the student!

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக வருண் குமார் பதவியேற்றவுடனேயே, " இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மேல்தளத்திலேயே மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார். அறிவித்தது போல், இன்று மாவட்டத்திலுள்ள 8 சரக டிஎஸ்பிகளையும் வரவழைத்து, அவர்களது முன்னிலையில் புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இவ்வேளையில், பேரையூர் காவல் நிலைய சரகம் கருங்குளத்தை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பவரது மகனான எட்டாம் வகுப்பு வடிவேலனையும், அவரது பெற்றோரையும் வரவழைத்த மாவட்ட எஸ்.பி.," சாதாரண ஆள் இல்ல சார் இவரு.. புளியமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சக மாணவனை ஒரு விநாடி கூட தாமதிக்காமல் மரம் ஏறி காப்பாற்றியவரு. அவரோட வீரத்தை என்னவென்று சொல்ல..? அதனால் தான் உங்க முன்னாடி பாராட்டலாம்னு வரச்சொன்னேன்." என புகழ்ந்து பாராட்டி விட்டு மாணவனின் பெற்றோர் முன்னிலையில் மாணவனுக்கு பரிசையும் வழங்கி கௌரவித்தார்.

RAMANATHAPURAM POLICE COMMISSIONER VARUN KUMAR  SP congratulated the student!

பாராட்டுதலுக்குரிய மாணவன் வடிவேலுவோ., "அவனும் என் கூடத்தான் எட்டாம் வகுப்பு படிக்கிறாக..! உடையார்கூட்டம் தான் அவனுக்கு சொந்த ஊரு... எப்பப் பார்த்தாலும் சாகுறதைப் பத்தி பேசிக்கிட்டிருப்பால... நாங்களும் கண்டும் காணாமல் இருப்போம். இப்ப என்னடான்னா நேற்று (11/11/2019) மத்தியானம் ஸ்கூல் இடைவேளை பெல்லில் யூரின் பாஸ் பண்ணிட்டு, புளியங்காயை சாப்பிடலாம்னு எம்கூட வெளிய வந்தவுக, மரத்தில ஏறி தூக்குப் போட்டுக்கிட்டாக.. பதறிப் போன நான் மரத்து மேல ஏறி அவன் இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சேன். அப்புறம் பக்கத்துல இருந்தவங்க, ஸ்கூலில் இருந்தவங்க வந்து அவனை காப்பாத்துனாக.. அவ்வளவுதான்." எனக் கூற அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் கைத்தட்டி பாராட்டி மகிழ்ந்தனர்.
 

சார்ந்த செய்திகள்