Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ்

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
ramadoss


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்த வகையிலும் பறிக்கப்படக்கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற உன்னத நோக்கத்துடன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சில திருத்தங்களைச் செய்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை சீராய்வு செய்ய மத்திய அரசு கோரியிருப்பது கண்டிக்கத்தக்கது.
 

வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பு எந்த வகையிலும் விமர்சிக்க முடியாத ஒன்றாகும். பணியிடங்களில் தவறு செய்யும் பணியாளர்களை கண்டித்தால் அவர்கள் தங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்து பழிவாங்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி சில அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்கொடுமைச் சட்டம் கடந்த 30 ஆண்டுகளாக அப்பாவி மக்களையும், அரசு ஊழியர்களையும் மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாற்றியுள்ளது. ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சாதியக் கோடுகளை அழிப்பதற்காகத் தான். ஆனால், அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் சாதி வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலான பொய்ப்புகார்களை பதிவு செய்வதற்காகவே தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சட்டம் சாதியை ஒழிப்பதற்கு பதிலாக சாதியத்தை நிலை நிறுத்திவிடும். ஒரு சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் தவறில்லை. இது பட்டியலின மக்களின் உரிமையை பறிக்காது.
 

பட்டியலின, பழங்குடியின மக்கள் மற்றவர்களால் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் 30 ஆண்டுகளுக்கு முன் 1989-ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இச்சட்டம் தவறானவர்களின் கைகளில் சிக்கி அப்பாவி மக்களை பழிவாங்கும் கருவியாக மாறி விட்டது. அதனால் தான் இச்சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதலே பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி,‘‘இந்த சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவரும் வகையில் திருத்தம் செய்யப்படவேண்டும். இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் & வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார் மனுக்கள் அனைத்தையும் இக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என எனது தலைமையில் நடந்த அனைத்து சமுதாயப் பேரியக்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதே கோரிக்கையை வலியுறுத்தி மராட்டியத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் மராத்தா மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் உள்ளது; அதற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு உள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. பட்டியலின மக்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. மாறாக, அவர்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் பிறரை பழிவாங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமாகும். உச்சநீதிமன்றமும் இதே கருத்தையே கூறியுள்ளது.
 

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் பட்டியலின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி இதுவரை வழங்கப்பட்டு வரும் எந்த சலுகையும், உரிமையும் பறிக்கப்படாது. ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கட்சிகளும் நடத்தியப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு  முடிவு செய்திருக்கிறது. இது தேசிய அளவில் தலித் அல்லாத 77.5% மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81% மக்களும் பழிவாங்கப்படுவதற்கு துணைபோகும் செயலாகும். இதற்கு காரணமான சக்திகளை இந்த சட்டத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 

இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடர்வதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக முடிவெடுத்துவிடவில்லை. மாறாக, மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளி விவரங்கள், முன்வைத்தக் கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி மொத்தம் 45,039 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 15-16% வழக்குகள் விசாரணை நிலையிலேயே  மூடப்பட்டன; 75% வழக்குகளில் குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்; மற்றவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மிகவும் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்றும் ஒப்புக்கொண்டது. ஆனால், இப்போது சில கட்சிகள் போராடுவதைக் காரணம் காட்டி, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றுவது சரியல்ல.
 

அதேபோல், இந்த வழக்கு விசாரணையின் போது போது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர் முன்பிணை பெறுவதற்கு அச்சட்டத்தின் 18-ஆவது பிரிவு தான் தடையாக இருப்பதாகவும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணீந்தர்சிங் வாதிட்டார். ஆனால், இப்போது அதே மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டால் அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவர் என்று கூடுவது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தான் உண்மை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்வதில் தாமதமானால், அதேசட்டத்தின்படி இழப்பீடு கிடைக்கவும் தாமதமாகும் என்பது தான்  மத்திய அரசும், மற்றவர்களும் கூறும் காரணமாகும். ஆனால், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   இழப்பீடு வழங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என  நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பிணை கோரினாலும், அவர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இருந்தால்  முன்பிணை வழங்கப்படாது& அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்பதால் இதுகுறித்த தீர்ப்பால் தலித்துகளுக்கு பாதிப்புகள் இல்லை.

 
நிறைவாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதை ஆதரிக்கின்றனவா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்; இவ்வழக்கில்  உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக மாற்றும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் பினாமி ஆட்சியாளர்கள் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.