![Property documents seized in crores of checks conducted by the Anti-Corruption Department in arakkonam](http://image.nakkheeran.in/cdn/farfuture/1jFyVYEtSgdbSAl3AytXX2cIuXRJi5ywTU3wLLfPIAo/1612150983/sites/default/files/inline-images/th-1_516.jpg)
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரத்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (தணிக்கை பிரிவில்) உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கணக்கில் வராத சொத்துகள் சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இவர்மீது புகார் சென்றுள்ளது. அந்தப் புகாரைப் பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அதிரடியாக ஜனவரி 31ஆம் தேதி காலை கோபி வீட்டிற்குள் ரெய்டு நடத்தியது.
இந்த சோதனையில் ஆறு வங்கிக் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவரை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அரக்கோணத்தில் அரசு அதிகாரியின் வீட்டில் திடீரென, விடுமுறை நாளான நேற்று (31.01.2021) நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு செய்து கோடிகளில் சொத்துக்களை, பணத்தை, தங்க நகைகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.