திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவித்தார்.
தேர்தல் நடத்தாமலே, அரசியல் செல்வாக்கின் காரணமாக, கூட்டுறவு சங்க விதிகளை மீறி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்திக்கு திருவண்ணாமலை மாவட்ட பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி, சுதாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பதிவாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்..
இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சரேஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இதுபோன்ற உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்திருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து ஜனவரி 7-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசிற்கு உத்தரவிட்டனர்.