Skip to main content

“விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Politics is done with Ganesha says Justice Anand Venkatesh

 

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கௌந்தம்பாடியில் 22 இடங்களிலும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட13 இடங்கள் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. காவல் துறையினரால் இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் கூடுதல் குற்றவியல் அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன்  ஆஜராகி வாதத்தை முன் வைக்கையில், “தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த பகுதிகளில், மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு உள்ளூர் போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும்”என தெரிவித்தார்.

 

Politics is done with Ganesha says Justice Anand Venkatesh

 

இதனை கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதிகோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது. சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில், இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன். விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது” என அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இவை தனது சொந்தக் கருத்து மட்டுமே எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்