திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில், கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் பொதுமக்கள் எந்தவித பயமுமின்றி தெருக்களில் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
![police commissioner came directly to catch bike](http://image.nakkheeran.in/cdn/farfuture/A4eEoQG63Qu2YE1aIFAFRiPFUPqxRkv_4XkDWnKxUpY/1586430631/sites/default/files/inline-images/11111_232.jpg)
இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் ஜீப்பில் இருந்து அதை கண்டுகொண்டு அலட்சியமாக இருப்பதை நேரடியாக கவனித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ, இன்ஸ்பெக்டர்களை மைக்கில் வெளுத்து வாங்கினார்.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/RaVz0W0sqfBgcFYSTEa8dVPmx9JRDPh-LtMKDokLv08/1586431608/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_61.gif)
அதே நேரத்தில் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ எச்சரிக்கை செய்தார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் வெளியே செல்லலாம் என குறிப்பிட்டுள்ளதை சிலர் தவறாக பயன்படுத்திக்கொண்டு, மாநகரின் பல்வேறு இடங்களில் சுற்றுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர். சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல் ஆணையர் வி.வரதராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாநகர் முழுவதும் இன்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 295 இருசக்கர வாகனங்கள், 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் 11 இடங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பகுதியிலும் மளிகை கடைகள் உள்ளன. எனவே இனிமேல் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க, தங்களது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது.
மீறி வந்தால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவமனை செல்வோருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
காவல் துறை ஆணையர் நேரடியாக களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டது திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.